Published : 28 Jan 2015 11:47 AM
Last Updated : 28 Jan 2015 11:47 AM
தொடர்ந்து ஐந்து வர்த்தக தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் ஏறுமுகம் கண்டுள்ளன. சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்து 29571 புள்ளியிலும் நிப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 8910 புள்ளியிலும் முடிவடைந்தன. நிப்டி 8900 புள்ளிகளுக்கு மேலே முடிவடைவது இப்போதுதான் முதல் முறையாகும்.
30000 புள்ளிகளை நெருங்கி வரும் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 29618 என்ற உச்சபட்ச புள்ளியைத் தொட்டது. இதேபோல நிப்டியும் 8925 என்னும் உச்சபட்ச புள்ளியை தொட்டது. நிப்டி தொடர்ந்து எட்டாவது வர்த்தக தினமாக உயர்ந்து முடிந்தது.
முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளில் பெரிய ஏற்றம் இல்லை.
பி.எஸ்.இ.யில் இருக்கும் 12 குறியீடுகளில் 9 குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. குறிப்பாக வங்கிக் குறியீடு அதிகம் உயர்ந்தது. இதற்கடுத்து கேபிடல் குட்ஸ், ஆட்டோ ஆகிய குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. டெக்னாலஜி மற்றும் மெட்டல் குறியீடுகள் சரிந்து முடிந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
அதேபோல டாக்டர் ரெட்டி, இன்போசிஸ், எம் அண்ட் எம், கோல் இந்தியா மற்றும் ஹெச்யூஎல் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
2015-ம் ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 7.5 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 2,019 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய பங்குச் சந்தைக்கு வந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT