Published : 26 Jan 2015 12:29 PM
Last Updated : 26 Jan 2015 12:29 PM
இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் முக்கியமான நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று உரையாற்ற இருக்கிறார்கள்.
வர்த்தக, பொருளாதார பிரச்சினைகள், விசா, முதலீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கூட்டாக இருவரும் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. இதில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி மற்றும் ஹனிவெல் நிறுவனத்தின் டேவிட் எம் கோட் ஆகியோர் இதில் இணைந்திருப்பார்கள்.
இது தவிர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், ஐசிஐசிஐ வங்கி தலைவர் சாந்தா கொச்சார், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, இன்போசிஸ் சி.இ.ஓ விஷால் சிக்கா, அதானி குழுமத்தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழுமத்தின் சசி ரூயா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா, எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஓ.என்.ஜி.சி தலைவர் தினேஷ் கே சராப், பி.ஹெச்.இ.எல். தலைவர் பிரசாத் ராவ், ஜூப்ளியன்ட் லைப் சயின்ஸ் நிறுவனத்தின் ஹரி பாரதியா மற்றும் டாரண்ட் பார்மா நிறுவனத்தின் சுதிர் மேதா ஆகிய 17 நபர்கள் கொண்ட குழுவும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குழுவில் பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி, மெக்ராஹில் பைனான்ஸியல் நிறுவனத்தின் ஹரால்டு மெக்ரா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் சி.இ.ஓ. அஜய் பங்கா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் ஒபாமா இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் இணைந்து தொழில்துறை தலைவர்களுடன் உரையாடுகிறார்.
2013-14-ம் நிதி ஆண்டில் இரு நாடுகளுக்கிடையே 6,164 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் ஏப்ரல் 2000 முதல் நவம்பர் 2014 வரையிலான காலகட்டத்தில் 1,328 கோடி டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்யும் ஆறாவது பெரிய நாடு அமெரிக்கா ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT