Published : 13 Jan 2015 12:29 PM
Last Updated : 13 Jan 2015 12:29 PM
நாட்டின் பொருளாதார வளர்ச்சி யோடு சுற்றுச்சூழல் காப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். வளரும் நாடுகள் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை. இதனால் சூழல் பாதிக்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டினார்.
வைப்ரண்ட் குஜராத் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள 30 கோடி ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய மிகப் பெரிய சவாலான பணி உள்ளது. இதனால் நாம் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். உற்பத்தித் துறையில்தான் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இதேபோல ஏற்றுமதியில் சிறந்து விளங்கும்போதுதான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் உற்பத்தித்துறை, ஏற்று மதி ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். இதற்கு பன்னாட்டு போட்டிகளைச் சமாளிக்கும் அளவுக்கு நாம் உயர வேண்டும் இந்த நிலையை எட்ட நமது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை எட்டுவது அதேசமயம் சுற்றுச் சூழலைக் காப்பது ஆகிய இரண்டும் மிகவும் இக்கட்டான பிரச்சினைகளாகும். இவை இரண்டையும் உரிய விகிதத்தில் கையாள வேண்டும். சுற்றுச் சூழல் காப்பு பிரச்சினையில் எங்கள் அமைச்சகத்துக்கு உள்ள பொறுப்புகளை தட்டிக் கழிக்க நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT