Published : 30 Jan 2015 11:25 AM
Last Updated : 30 Jan 2015 11:25 AM

காலாண்டு முடிவுகள்

ஓ.பி.சி. லாபம் 91% சரிவு

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 91 சதவீதம் சரிந்து ரூ.19.5 கோடியாக இருக்கிறது கடந்த வருடம் இதே காலாண்டில் 224 கோடி ரூபாயாக இருந்தது.

கடன்களை மறுசீரமைப்பு செய்தது, வாராக்கடன்களுக்கான அதிக ஒதுக்கீடு செய்தது ஆகிக காரணங்களால் நிகர லாபம் குறைந்ததாக புதிதாக பொறுப்பேற்ற வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அனிமேஷ் சவுகான் தெரிவித்தார். நிகர லாபம் குறைந்திருந்தாலும் வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5,063 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,458 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

ஹெச்டிஎப்சி. லாபம் 12% உயர்வு

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎப்சி. நிறுவனத்தின் நிகர லாபம் 11.6 சதவீதம் உயர்ந்து 1,425 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 1,277 கோடி ரூபாயாக இருந்தது.

மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,019 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 6,870 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வீட்டுக் கடனுக்கான தேவை உயர்ந்திருப்பதால் நிகர லாபம் அதிகரித்துள்ளது. டிசம்பர் காலாண்டு முடிவுகளின்படி 2.19 லட்சம் கோடி அளவுக்கு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கேவிபி லாபம் ரூ.113 கோடி

தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து 113 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 106 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 1,403 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 1,511 கோடியாக உயர்ந்திருக்கிறது.

மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 1.47 சதவீதமாக இருந்த வாராக்கடன் இப்போது 1.91 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 0.73 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

வாராக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 106 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் இது 50.65 கோடி ரூபாயாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x