Published : 27 Jan 2015 10:33 AM
Last Updated : 27 Jan 2015 10:33 AM
இந்திய பாதுகாப்பு துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்கள் மற்றும் குழுமத்தின் தொழில் உத்திகள் பிரிவு தலைவருமான ஸ்ரீபிரகாஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு துறையில் முதலீடுகளை அதிகரிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக இந்த துறையின் வளர்ச்சி உச்ச நிலையை அடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசு பாதுகாப்பு துறைச் சார்ந்த கருவிகளை உற்பத்தி செய்ய அந்நிய முதலீட்டா ளர்களுக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் இது இந்தியாவுக்கு பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முக்கிய விவகாரங்கள் குறித்த அரங்கில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய முதலீடுகள் மூலமாக, பாதுகாப்பு துறை சார்ந்த கருவிகளின் உற்பத்திக்கு அனுமதிக்க அளிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இந்தியா சமீபத்தில் முன்னெடுத்துவரும் முக்கிய விவகாரம் இது. இதன் தொடக்கத்தில் லாப தொடர்ச்சி என்ன என்பதை விடவும் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த துறையில் முதலீடு செய்வது குறித்து பலரும் விவரங்கள் விசாரித்து வருவதாகவும், மஹிந்திரா இந்தியா குழுமத்துடன் சேர்ந்து தொழில் நுட்பம் மற்றும் தொழில் முதலீடுகள் செய்ய பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேக் இன் இந்தியா முழக்கம் உலக சமுதாயத்தின் மனதை கவர்ந்துள்ளது.
அந்த உணர்ச்சிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் இதை சரியான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்த துறையில் தொழில் செய்வதற்கு குறிப்பான விசாரணைகள் வந்துள்ளது என்கிற கேள்விக்கு அகண்ட அலைவரிசை மற்றும் பல துறைகளிலும் விசாரணைகள் வந்துள்ளது என்றும் சுக்லா குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT