Published : 06 Jan 2015 11:33 AM
Last Updated : 06 Jan 2015 11:33 AM
கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகம் கண்ட பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை லேசான சரிவைச் சந்தித்தது. காலை வர்த்தகத்தில் 28 ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்த போதிலும் வர்த்தகம் முடிவில் 45 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 27842 புள்ளிகளானது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 17 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 8445 புள்ளிகளானது. கடந்த 6 தின வர்த்தகத்தில் பங்குச் சந்தையில் மொத்தம் 680 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் புனேயில் நடைபெற்ற வங்கியாளர்கள் மாநாட்டில், வங்கித் துறையில் சீர்திருத்தம் தொடரும் என அரசு அளித்த உத்தரவாதம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கித்துறை பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக உள்ளது.
டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ, ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, கோல் இந்தியா, ஹெச்டிஎப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா பவர் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ரூ. 4 ஆயிரம் கோடிக்கான ஆர்டரைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்கு விலை 1.42 சதவீதம் உயர்ந்து ரூ. 1,556.50-க்கு விற்பனையானது.
மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், கெயில், ஐடிசி, ஹீரோ மோட்டோ கார்ப், சன் பார்மா ஆகிய நிறுவன பங்குகளின் விலை சற்று உயர்ந்ததில் குறியீட்டெண் வீழ்ச்சி ஓரளவு மட்டுப்பட்டது.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்தன. 15 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. என்டிபிசி பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலை நீடித்தது. ஆசிய பிராந்தியத்தில் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்வான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,545 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,420 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 2,729 கோடியாகும். அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 259 கோடி மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்திருந்தன
ரூபாய் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவைச் சந்தித்தது. 12 காசுகள் சரிந்ததில் ஒரு டாலருக்கு ரூ. 63.41 தர வேண்டியதாயிற்று. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு டாலருக்கு ரூ. 63.29 தர வேண்டி யிருந்தது. வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் டாலர் வாங்கியதால் ரூபாய் மதிப்பு சரிந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT