Published : 12 Jan 2015 11:02 AM
Last Updated : 12 Jan 2015 11:02 AM
ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று தொடங்கிய ``வைப்ரன்ட் குஜராத்’’ முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதில் பங்கேற்கும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தங்களைப் போல குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்து பலனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்யத் தொடங்கிய பிறகுதான் தங்கள் தொழில் வளர்ச்சியடைந்து தொலை நோக்கு இலக்கை எட்ட முடிந்தது என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த மாநாடு முந்தைய மாநாட்டைக் காட்டிலும் வெற்றிகரமான மாநாடாக அமைந்து வருவதாக முகேஷ் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் ``மேக் இன் இந்தியா’’ மற்றும் ``டிஜிட்டல் இந்தியா’’ உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவை மேலும் வலிமையானதாக்கும் என்றார். இந்த மாநாட்டில் அமெரிக்கா கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT