Last Updated : 28 Dec, 2014 12:53 PM

 

Published : 28 Dec 2014 12:53 PM
Last Updated : 28 Dec 2014 12:53 PM

வளர்ச்சி பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்

நடப்பாண்டில் சென்செக்ஸ் சுமார் 30 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சென்னை வந்திருந்த ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்டின் நிர்வாக இயக்குநர் சந்திரேஷ் குமார் நிகாமிடம் அடுத்த வருடம் பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும், மியூச்சுவல் பண்ட் துறை செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசினோம். அதிலிருந்து...

ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம் கொல்கத்தாவில் படித்தவர் நிகாம். மியூச்சுவல் பண்ட் துறையில் 24 வருட அனுபவம் மிக்கவர். எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ புரூடென்சியல் மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவர்.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்டின் முதலீட்டு திட்டம் என்ன?

நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தைகள் நல்ல லாபம் கொடுப்பவை. ஆனால் சிறுமுதலீட் டாளர் பெரிய அளவில் லாபம் அடையவில்லை. இதற்கு நீண்ட காலம் சந்தையில் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது தவறான நேரத்தில் சந்தையில் நுழைந்து தவறான நேரத்தில் வெளியேறி இருக்கலாம்.

பங்குச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் ரிஸ்க் எடுத்தால் அதிக லாபம், அதே சமயம் அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நல்ல லாபம் கிடைக்க இன்னொரு வழியும் இருக்கிறது. தரமான பங்குகளை தேர்ந்தெடுத்து மூன்று முதல் ஐந்து வருடங்களில் முதலீடு செய்யும் போது நல்ல லாபமும் கிடைக்கும். இதைதான் நாங்கள் செய்கிறோம்.

தரமான பங்குகளை எப்படி தேர்ந் தெடுக்கிறீர்கள்?

இந்தியாவில் பணம் சம்பாதிப் பது மிகவும் எளிது. வளர்ச்சி எங்கும் எதிலும் இருக்கிறது. ஆனால் நீடித்த நிலையான வளர்ச்சி இருக்கும் பங்குகளில் முதலீடு செய்கிறோம்.

பொருட்களுக்கு அல்லது சேவை களுக்கு விலையை ஏற்றும் தைரி யம் (pricing power) இருக்கும் நிறு வனங்கள்தான் எங்கள் இலக்கு. விலையை ஏற்ற முடியும் என்றால், பொருள் தரமாக இருக்கவேண்டும், பிராண்ட் மதிப்பு இருக்க வேண்டும். இவை இருந்தால் மட்டுமே விலையை ஏற்ற முடியும்.

பிஸினஸின் அடிப்படையே பணம் சம்பாதிப்பதுதான். பொருட் களுக்கு விலையை ஏற்ற முடியும் என்றால் அந்த பங்குகள்தான் எங்கள் இலக்கு.

கடந்த வருடம் பங்குச்சந்தையின் ஏற்றம் இருந்தது. இந்த ஏற்றம் தொடருமா?

கண்டிப்பாக. சந்தை இப்போது தான் உயர ஆரம்பித்திருக்கிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கு இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பாக இருக்கும்.

எதாவது இலக்கு சொல்ல முடியுமா?

சர்வதேச சூழ்நிலையால் ஏற்ற இறக்கம் இருக்கலாம். அதனால் என்னால் இலக்கு ஏதும் சொல்ல முடியாது. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் சந்தை இரு மடங்கு உயர்ந்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்காது. நான் பல நாடுகளின் பண்ட் மேனேஜர்களை சந்தித்திருக்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் இந்திய சந்தையைதான் கவனிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார் கள். அவர்கள் இன்னும் முதலீடு செய்யவில்லை என்பது நல்ல செய்தி. சந்தை குறைய குறைய முதலீடு செய்யலாம்.

கச்சா எண்ணெய் சரிவு, பணவீக்கம் குறைந்தது போன்ற சாதகமான சூழ்நிலை இருந்தாலும், சர்வதேச அளவில் நெகட்டிவ் விஷயங்களும் இருக்கின்றன.

உங்களது மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் செக்டார் பண்ட்கள் இல்லை, அதேபோல சர்வதேச பண்ட் களும் இல்லை. அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறதா?

செக்டார் பண்ட்களை அறிமுகப் படுத்தும் திட்டம் இல்லை. சில சமயம் சிறப்பாக இந்த பண்ட்கள் செயல்படும், சில சமயம் மோசமாக செயல்படும். இருந்தாலும் என்னை பொறுத்தவரை செக்டார் பண்ட்களால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்ததாக தெரியவில்லை. 2000-ம் ஆண்டு ஐடி துறை பங்குகள் நல்ல லாபம் கொடுத்தன. அதன் பிறகு சரிந்தன. அதேபோல இன்பிரா துறை பங்குகள் 2008-ம் கடுமையாக சரிந்தன. அப்போது முதலீடு கடுமையாக சரிந்தது.

ஆனால் அதேசமயம் சர்வதேச பண்ட்கள் பிரித்து முதலீடு செய்ய உதவும். பிறகு பார்ப்போம்.

மியூச்சுவல் பண்ட் துறையில் நிறுவனங்கள் இணைந்து வருகிறது. ஏதேனும் நிறுவனத்தை இணைக்கும் திட்டம் இருக்கிறதா?

இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. ஆனால் ஏதேனும் நிறுவனங்கள் வரும் பட்சத்தில் பார்ப்போம்.

நிதிகளை கையாளுவதில் இப்போது 12-வது இடத்தில் இருக்கிறீகள்? என்ன இலக்கு வைத்திருக்கிறீர்கள்?

முதல் ஐந்து இடத்துக்குள் வரவேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அதற்கு இன்னும் சில காலம் ஆகும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய் யும் சிறுமுதலீட்டாளர்கள் பெரும் பாலும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங் களிலே முதலீடு செய்கிறார்கள். ஏன் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டினை நீங்கள் முன்னிலை படுத்துவ தில்லை? உங்கள் நிறுவனம் எப்படி?

நீங்கள் சொல்வது சரி, எங்களிடம் சுமார் 7 லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் கணக்கு இருக்கிறது. இதில் 3.5 லட்சம் முதலீட்டாளர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களிலும், 3 லட்சம் முதலீட்டாளர்கள் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களிலும் 50,000 முதலீட்டாளர்கள் மட்டுமே கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

மியூச்சுவல் பண்ட் என்றாலே பங்குச்சந்தை சார்ந்தவை என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தி யில் இருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்ற முயற்சித்து வருகிறோம்.

உங்களுடைய மியூச்சுவல் பண்டில் இரண்டு 5 நட்சத்திர பண்ட்கள் மட்டுமே இருக்கிறதே? பண்ட்களை வரிசை படுத்துதலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ரேட்டிங் அவசியம். அப்போது தான் முதலீட்டாளர்களுக்கு பண்ட்களின் செயல்பாடு தெரியும். ஆனால் சில சமயங்களில் குறிப்பிட்ட பண்ட்களை அதன் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாத சூழ்நிலை இருக்கும்.

மேலும் எங்களுடைய ஈக்விடி பண்ட் செயல்பட ஆரம்பித்து 3 வருடங்கள்தான் ஆகிறது.

நேரடியாக முதலீடு செய்ய முதலீட் டாளர்கள் வருகிறார்களா?

விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் வருகிறார்கள். இருந்தாலும், நிதி ஆலோசகர்கள் மூலமாக தேவை மற்றும் ரிஸ்க் ஆகியவற்றை தெரிந்து முதலீடு செய்வது நல்லது.

சிறுமுதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

முதலீல் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை/இலக்கு ஆகியவற்றை குறித்து முடிவுகள் செய்யுங்கள். முறையான நிதி ஆலோசகர்கள் மூலம் நீண்ட கால நிதி திட்டமிடலை செய்யுங்கள். அந்த திட்டமிடலை முறையாக தொடருங்கள்.

திட்டமிடலை விட அதை செயல்படுத்துதல் மிகவும் முக்கியம். சிறுமுதலீட்டாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x