Published : 04 Dec 2014 11:34 AM
Last Updated : 04 Dec 2014 11:34 AM

மார்ச்சில் சுரங்கம் ஏலம்

சுரங்கம் மற்றும் கனிம தொழிலில் வெளிப்படையான ஏலம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவுசெய்துள்ளது. முதற்கட்டமாக மார்ச் 15 ல் இந்த ஏலம் தொடங்கலாம் எனத் தெரிகிறது.

இந்திய தொழிலக் கூட்டமைப்பு சார்பில் (சிஐஐ) சர்வதேச சுரங்கத் தொழில் 2014 கண்காட்சி நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய கனிம வளத்துறை செயலாளர் அனூப் கேஆர் பூஜாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஏலம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என நம்புவதாக தெரிவித்தார். நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் நிலைக்குழுவுக்கு அனுப்பப் போவதாகவும் அவர் கூறினார்.

இந்த சட்டத் திருத்தத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறினார். இந்த சட்டதிருத்தம் மற்றும் ஒதுக்கீட்டுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதாகவும், சுரங்கத்துறை மீண்டும் வேகம் பெற அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது என்றும் பூஜாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீடு பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது. அதேநேரத்தில் பொருளாதார ரீதியாக இதுதான் சரியான வழி என்றும் குறிப்பிட்டார். இந்த ஒதுக்கீட்டில் எந்த இடத்தில் சிக்கல் என்றாலும் சட்டரீதியான சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்ட பூஜாரி, இது தொடர்பாக மாநிலங்களின் கருத்துகளுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x