Last Updated : 03 Jul, 2019 01:27 PM

 

Published : 03 Jul 2019 01:27 PM
Last Updated : 03 Jul 2019 01:27 PM

மத்திய பட்ஜெட்; வளர்ச்சி சரிவு, உற்பத்தி குறைவு, வேலையில்லா திண்டாட்டம்: நிர்மலா சீதாராமனுக்கு காத்திருக்கும் சவால்கள்

பொருளாதார வளர்ச்சி சரிவு, உற்பத்தி குறைவு, வேலையில்லா திண்டாட்டம் என பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள முதல் மத்திய பட்ஜெட் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது.

இந்திரா காந்திக்கு பிறகு முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்றுள்ள இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் அடுத்தடுத்து சவால்களை சந்திக்கும் காலமாக உள்ளது.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையை சீனாவிடம் இந்தியா பறி கொடுத்துள்ளது. வேகமான பொருளாதார வளர்ச்சியில் சீனா நம்மை முந்திச் சென்றுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது.

பருவமழை அளவு குறைந்து, விவசாய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தொழில் செய்வதற்கான நிதி கிடைக்காமல் தவிக்கின்றன. ஏற்றுமதி சுணக்கம் அடைந்திருக்கிறது. அரசு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தீர்க்க வேண்டிய சூழலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார் நிர்மலா சீதாராமன். அதைவிடவும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த போதுமான நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டும். பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கவும், அதேசமயம் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தற்போது தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயம், தண்ணீர் பகிர்வு, உள்கட்டமைப்பு, சிறு குறு தொழில்கள், வங்கி வாராக்கடன், புதிய தொழில்கள் தொடங்குதல் உள்ளிட்ட இலக்குகளை கொண்டதாக மத்திய பட்ஜெட் இருக்கும் என கருதப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x