Published : 05 Jul 2019 01:52 PM
Last Updated : 05 Jul 2019 01:52 PM

புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்: ஆரவாரம் செய்த எம்.பி.க்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றியபோது, புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி பேசினார். இதைகேட்டு எம்.பி.க்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்

பட்ஜெட் உரையின்போது வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அப்போது, ‘யானை புகுந்த நிலம்போல’ என்ற பிசிராந்தையாரின் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டிய  நிர்மலா சீதாராமன் வரி குறித்து பேசினார். மன்னர் எவ்வாறு வரிவசூலிக்க வேண்டும் என்பதை பாண்டிய மன்னனுக்கு பிசிராந்தையார் எடுத்துக் கூறியதை நிர்மலா விளக்கினார்.

“வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோறு ஆக மாற்றி யானைக்கு தந்தால், சிறிய நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாக கிடைக்கும்.

ஆனால், அதற்கு பதிலாக யானையை வயலுக்குள் சென்று பயிரை மேய அனுமதித்தால், அந்த யானை உண்ணும் நெல்லை விடவும், அதன் காலில் பட்டு வீணாகும் நெல் மிகுதியாக இருக்கும்.

அதேபோல, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், யானை புகுந்த நிலம் போல அரசுக்கும் பயன் தராமல், மக்களும் பயன் கிடைக்காமல் வீணாகிவிடும்” என்பதுதான் அந்த பாடலுக்குரிய விளக்கம் என நிர்மலா தெரிவித்தார்.

அவரது புறநானூற்று பாடல் விளக்கத்தை கேட்டு தமிழக எம்.பி.க்கள் புன்னகை செய்தனர். மற்ற எம்.பி.க்களும் மேஜை தட்டி ஆரவாரம் செய்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x