Published : 01 Nov 2014 11:11 AM
Last Updated : 01 Nov 2014 11:11 AM

உங்கள் பிசினஸ் உத்தியை 35 வார்த்தைகளில் கூற முடியுமா?

‘அட போய்யா, உத்தியாவது சுத்தியாவது. கடவுள் மேல பாரத்தை போட்டு பிசினஸ் செய்யறேன்’ என்று சொல்லும் கேஸா நீங்கள். உங்களிடம் பேசி ஒரு பிரயோஜனமுமில்லை. மற்றவர்கள் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு கண்ணியம். உங்கள் பிசினஸுக்கு புண்ணியம்!

உத்தியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தொழில் செய்வோர் ஒரு ரகம். உத்தியை கம்பெனி ஊழியர்களுக்கு சொல்லாமல் அவர்களை ஒவ்வொரு திசையில் அலைய விட்டு கம்பெனியை குழி தோண்டி புதைப்போர் அடுத்த ரகம். இதைத் தான் ‘ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ’Can you say what your strategy is?’ என்று கேள்வியாய் எழுப்பினார்கள் ’டேவிட் காலிஸ்’ மற்றும் ’மைக்கேல் ரக்ஸ்டட்’.

தழைக்க வேண்டிய கம்பெனியில் பிழைக்க உழைக்கும் ஊழியர்கள் இரும்பு துண்டுகள். இரும்பு துண்டுகளை கீழே எரிந்தால் என்னவாகும்? நாலாபக்கமும், வெவ்வேறு திசை செல்லும். ஊழியர்களும் அது போல் ஆளுக்கொரு பக்கம் நிற்பார்கள். இதுவே பல கம்பெனிகளில் நடக்கிறது. ஒருவர் செய்வது மற்றவருக்கு தெரிவதில்லை.

மார்க்கெட்டிங் ஒரு பொருளை கேட்டால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (ஆர் அண்ட் டி) வேலை மெனக்கெட்டு வேறொரு பொருளை வடிவமைக்கிறது. தயாரிப்பு துறை ஒரு பொருளை தயாரிக்க சேல்ஸ் டீம் அதன் அம்சங்களை அறியாமல் வேறு எதையோ சொல்லி விற்கிறது. சேல்ஸ் டீம் விற்கும் விலைக்கு கம்பெனியை மூட வேண்டியதுதான் என்று பைனான்ஸ் டீம் ஒப்பாரி வைக்கிறது. உத்தி இல்லாமல், இருந்தாலும் தெளிவாக சொல்லாமல் குழப்பம் குடும்பத்துடன் குடி வைக்கப்பட்டு கம்பெனி குட்டிச்சுவர் ஆகிறது.

எரிந்த இரும்பு துண்டுகள் மீது காந்தத்தை எடுத்துச் சென்றால் அவை ஒன்றன்பின் ஒன்றாக நிற்கிறதில்லையா. அதுபோல்தான் திறனுடன் வடிவமைக்கப்படும் உத்தியும் அதைத் தெளிவாக அனைவருக்குக் கூறுவதும். அந்த காந்தம்தான் ’உத்தி வாக்கியம்’ (Strategy Statement). இது திறனாக வடிவமைக்கப்பட்டு தெளிவாக விளக்கப்படும்போதுதான் அனைவருக்கும் இலக்கு தெளிவாகிறது. செயல்கள் எளிதாகிறது. அந்த உத்தி வாக்கியம் மூன்று அங்கங்கள் கொண்டது.

இலக்கு

உத்தி வாக்கியத்தின் முதல் அங்கம் கம்பெனி செல்ல வேண்டிய இலக்கு. செல்லவேண்டிய இலக்கை வடிவமைப்பது ஒரு புறம். அதை அடையவேண்டிய காலத்தை நிர்ணயிப்பதும் அவசியம். ‘காவிரி பிரச்சனையை தீர்க்கவேண்டும்’ என்று காமராஜ் காலம் முதல் சொல்லி வருகிறோம். அதனால் தான் அது நீண்டு கொண்டே போகிறது. ‘2016க்குள் தீர்ப்போம்’ என்று செயல்பட்டால்தான் அது இலக்காகிறது. நினைத்தபடி முடிக்கவேண்டும் என்ற ப்ரெஷரில் முடிக்கவும் முடிகிறது.

அதிக வளர்ச்சி, அபரிமிதமான லாபம் போன்றவை இலக்கல்ல. எத்தனை சதவீத வளர்ச்சி, என்ன காலகட்டம் என்பது முக்கியம். ’இளம் தொழிற்முனைவோர் குழுமம்’ (Young Entrepreneurs School) என்ற தொழிலதிபர் கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் ‘வருடத்திற்கு 30% வளர்ச்சி காண்போம்’ என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். அது போல் இலக்கு குறிப்பிட்டதாய், குறித்த காலக்கெடு உடையதாய் இருக்கவேண்டும்.

செயற்பரப்பு

அடுத்து, கம்பெனி செயற் பரப்பை வரையறுக்கவேண்டும். மூன்று பரிமாணங்களைக் கொண்டது இது: யார் வாடிக்கையாளர், என்ன அளிக்கப் போகிறோம், வேறு எந்த தொழில், பொருட்களோடு வர்டிகலாக இண்டக்ரேட் ஆகப்போகிறோம்.

ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் போகிறீர்கள் எனில் என்ன மாதிரி ரெஸ்டாரண்ட்? சைவமா, அசைவமா? சைவம் எனில் உடுப்பியா, செட்டிநாடா, வட இந்திய உணவா? அளிக்கப்போவது பாஸ்ட் புட்டா, ஆற அமர்ந்து உண்ணும் டைனிங் முறையா? ப்ரீமியம் விலையிலா, குறைந்த விலையிலா? ஸ்வீட், சேவரி போன்றவையும் உண்டா? ஹோம் டெலிவரி உண்டா? பல்க் ஆர்டர் எடுப்போமா? சென்னையில் மட்டுமா, தமிழகமெங்குமா, நாடெங்கிலுமா? அதாவது பிசினஸின் மொத்த ஸ்கோப்பையும் வரையறுப்பது. பிசினஸ் எங்கு செல்லவேண்டும் என்பதில் இருக்கும் தெளிவு அது எங்கு செல்லக்கூடாது என்பதிலும் வேண்டும்.

சாதகம்

உத்தியின் சாரம் காம்பெடிடிவ் அட்வாண்டேஜ். உத்தி வாக்கியத்தின் முக்கியமான மூன்றாவது அங்கம் இதுவே. ஒரு கம்பெனியை தனித்துவமாக ஆக்குவது அதற்கு மட்டுமே சொந்தமான சாதக அம்சங்கள். செட்டிநாட்டு ஸ்டைல் சைவ ரெஸ்டரண்ட் ஒன்றை சென்னையில் ஆரம்பிக்கப் போகிறோம் என்று முடிவு செய்தால் போதுமா? உடனே வாடிக்கையாளர்கள் வாசலில் க்யூ கட்டுவார்களா? அவர்கள் ஏன் உங்களிடம் வரவேண்டும்? மற்ற செட்டிநாட்டு ஹோட்டல்கள் தராத எதை நீங்கள் தரப் போகிறீர்கள்? போட்டியாளர்களிடம் இல்லாத எவை உங்களிடம் இருக்கப் போகிறது? அதையும் தெளிவாக வரையறுக்கவேண்டும்.

அதோடு உங்களால் மட்டுமே எப்படி அந்த வித்தியாசத்தை அளிக்கமுடிகிறது என்பதிலும் தெளிவு வேண்டும்.

இலக்கு, செயற்பரப்பு, சாதகம் மூன்றையும் வரையறுப்பது லேசுபட்ட காரியமல்ல. ஒன்றுகொன்று விட்டுக்கொடுக்க வேண்டி வரும். அதிக வளர்ச்சி, மார்கெட் ஷேர் வேண்டும் என்றால் லாபம் சற்று குறைவாகத் தான் இருக்கும்.

உத்தி வாக்கியம் தனித்தன்மை வாய்ந்தது. கம்பெனிக்கு கம்பெனி வித்தியாசப்பட வேண்டியது. ஒரு கம்பெனியின் உத்தி வாக்கியம் அதன் போட்டி கம்பெனிக்கும் பொருந்தும் என்றால் அந்த உத்தி வாக்கியம் சிறந்ததாக, வெற்றி ஈட்டித் தருவதாக இருக்கமுடியாது. முதற் காரியமாக அந்த உத்தியை சுத்தியால் அடித்து சுக்கு நூறாக உடைத்தெறிந்து தனித்துவமாய் திகழும் வகையில் மாற்றி அமைப்பது அவசியம்.

உத்தி வாக்கியம் அமைப்பது பெரியதல்ல. அதை சேர்மன் முதல் சேர் துடைப்பவர் வரை, முதலாளி முதல் கடை நிலை ஊழியர் வரை தெள்ளத்தெளிவாக விளக்கவேண்டும். எங்கு செல்கிறோம், என்ன செய்யப் போகிறோம், எப்படி அடையப் போகிறோம் என்பது தெரிந்தால்தான் உத்தி முழுமையடையும். ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். ஊழியர் கூடி உழைத்தால் தான் இலக்கை அடைய முடியும்!

அது சரி, உத்தியை எதற்கு 35 வார்த்தைகளில் ஹைக்கூ மாதிரி எழுதுவது? சரி வேண்டாம், மரபுக்கவிதையில் எழுதுங்கள். அறுசீர் விருத்தத்தில் ட்ரை பண்ணுங்கள். யார் தடுக்கிறார்கள்? என்ன, யாருக்கும் ஒரு எழவும் புரியாது. பரவாயில்லையா?

உத்தி புத்திக்கு உறைக்கவேண்டும். சிக்கென்று இருந்தால் சீக்கிரம் புரியும். ஏழெட்டு வார்த்தைகள் அதிகமானாலும் ஓகே. டெண்டர் போல் வளவளவென்று எழுதினால் நீங்களே படிப்பீர்களா? உத்தியை சிக்கென்று, சிக்கனமாய், சிறப்பாய் எழுதுங்கள். பட்டு புடவை பார்க்க பவ்யமாய் இருந்தாலும் மினி ஸ்கர்ட் தானே காண மஜாவாக இருக்கிறது. அட, இத நான் சொல்லல சார், காலிஸ் & ரக்ஸ்டட் சொல்கிறார்கள்!

satheeshkrishnamurthy@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x