Last Updated : 09 Aug, 2017 10:27 AM

 

Published : 09 Aug 2017 10:27 AM
Last Updated : 09 Aug 2017 10:27 AM

பார்தி இன்பிராடெல் பங்கு விற்பனை மூலம் ரூ.2,570 கோடி திரட்ட ஏர்டெல் நிறுவனம் திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது துணை நிறுவனமான பார்தி இன்பிராடெல் நிறுவனத்தின் 3.65 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இது தொடர்பாக பார்தி ஏர்டெல் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 6.75 கோடி பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் ரூ.2,570 கோடி நிதி திரட்டி இருக்கிறது.

திங்கள்கிழமை முடிவு விலையை விட 5 சதவீத தள்ளுபடி விலையில் இந்த பங்கு பரிவர்த்தனை நடந்திருக்கிறது. ரூ378 முதல் ரூ.398 வரையிலான விலையில் இந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது.

திரட்டப்படும் நிதியைக் கொண்டு நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைக்க உள்ளதாகவும் பார்தி ஏர்டெல் கூறியுள்ளது. ஜூன் மாத நிலவரப்படி நிறுவனத்தின் கடன் ரூ.87,840 கோடி என்று பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யுபிஎஸ் மற்றும் ஜேபி மார்கன் நிறுவனங்கள் இணைந்து இந்த பரிவர்த்தனையை ஒருங்கிணைத்துள்ளன.

ஜூன் காலாண்டு முடிவுக்கு பிறகு நிறுவனம் மேற்கொண்ட முடிவுகள் குறித்து ஏர்டெல் நிறுவனம் கூறியபோது, ஏர்டெல் நிறுவனம் தனது துணை நிறுவனமான நெட்டில் இன்பிராஸ்டிரக்சர், பார்தி இன்பிராடெல் நிறுவனத்தில் வைத்திருக்கும் 10 சதவீத பங்குகளை விற்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம், தனது டவர் பிரிவில் 10.3 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.6,193 கோடி திரட்டியது. இதன் மூலம் நிறுவனத்தின் கடனில் பகுதி அளவில் செலுத்தியது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட குழு இன்பிராடெல் நிறுவனத்தின் பங்குகளை பகுதியளவு விலக்கிக் கொள்ள மதிப்பீடு செய்தது. ஆனால் மார்ச் 15ம் தேதி நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய வேண்டாம் என முடிவு செய்ததுடன், துணை நிறுவனமான நெட்லி இன்பிராஸ்டிரக்சர் வசம் இருக்கும் பார்தி இன்பிராடெல் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்தது.

நேற்றைய வர்த்தகத்தில் பார்தி இன்பிராடெல் பங்கு 3.58 சதவீதம் சரிந்து 383.60 ரூபாயில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x