Published : 20 Aug 2017 12:57 PM
Last Updated : 20 Aug 2017 12:57 PM
புதுச்சேரியில் தொழில் தொடங்க வருவோர் 60 சதவீதம் வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய குழுக் கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். சிஐஐ தென் பிராந்திய தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழில் ஆர்வலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசியதாவது: எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, சிஐஐ உள்பட பல்வேறு தரப்பினருடன் கலந்து பேசி புதிய தொழிற்கொள்கையை உருவாக்கினோம். புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றியும் என்ன தொழில்கள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ஆராய்ந்தோம். பிற மாநில தொழிற்கொள்கைகளில் உள்ள சிறந்த அம்சங்களை அறிந்து புதிய தொழிற்கொள்கை வடிவமைக்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான தொழில்முனைவோர் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வந்து அரசிடம் ஆலோசனை செய்தனர். எனினும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்த நடவடிக்கை தடைப்பட்டது. தற்போது புதிய தொழிற்சாலைகளை தொடங்கும் நடவடிக்கை மீண்டும் நடந்து வருகிறது.
புதுச்சேரியில் தொழில் தொடங்க வருவோருக்கு அரசு வைக்கும் ஒரே வேண்டுகோள் ; உள்ளூர் இளைஞர்களுக்கு 60 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதாகும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில்துறைக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக குழு உறுப்பினர் என்ற முறையில் வரும் கூட்டத்தில் எடுத்துரைப்பேன் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT