Published : 28 Jul 2017 09:16 AM
Last Updated : 28 Jul 2017 09:16 AM
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை மாநிலங்களவையில் அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன என்று மத்திய அமைச்சர் கட்கரி கூறினார். புதிய விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். போக்குவரத்து துறையில் அடிப்படையான பல சீரமைப்பு திட்டங்களுடன் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. அனைத்து கட்சிகளும் தங்களது ஆலோசனையை மாநிலங்களவை துணை தலைவர் பி.ஜே குரியனிடம் திங்கள்கிழமைக்குள் அளிக்க உள்ளதாகக் கூறின.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக உள்ளதாக அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. இதை மாற்றியமைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு இதை பரிந்துரைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளன. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள், தங்களது கருத்துகளை வரும் திங்கள்கிழமைக்குள் துணைத் தலைவரிடம் அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் கட்கரி கூறினார்.
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார். மேலும், திரும்பவும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும், அப்போதும் இது தொடர்பாக முடிவுகள் எட்டப்படாத பட்சத்தில் நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு பரிந்துரைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. எனவே உடனடியாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதை தேவையற்ற வகையில் எந்த காரணத்தாலும் தாமதப்படுத்தக்கூடாது. இதனால் மேலும் பல உயிரிழப்பை தடுக்க முடியும். மோட்டர் வாகனச் சட்டம் 1988 கொண்டுவரப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கடந்த ஆண்டே மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பும்,தேர்வு குழுவின் மறு பரிசீலனைக்கு அனுப்பவும் உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தெரிவிக்கும் யோசனைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கட்கரி தெவித்துள்ளார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT