Last Updated : 16 Jul, 2017 12:06 PM

 

Published : 16 Jul 2017 12:06 PM
Last Updated : 16 Jul 2017 12:06 PM

தொழில் நுட்பத்தால் தகவல் திருட்டை தடுக்கிறோம்

தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று மியூச்சுவல் பண்ட். இது குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் என மூவருக்கும் கேம்ஸ் (CAMS) நிறுவனம் சேவையை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எம்.சோமசுந்தரத்தை சந்தித்து உரையாடினோம். மியூச்சுவல் பண்ட் துறை குறித்து அவரிடம் உரையாடியதில் இருந்து.

முதலீட்டாளர்களுக்கு என்னென்ன சேவைகளை வழங்குகிறீர்கள்?

ஒரு முதலீட்டாளர் பல மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்திருப்பார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு பண்ட் நிறுவனத்தில் இருந்து தனித்தனியாக ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டி இருக்கும். நாங்கள் ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்துள்ள அத்தனை மியூச்சுவல் பண்ட்களை பற்றியும் தகவல்களை வழங்குகிறோம். தவிர ஒரு முதலீட்டாளர்கள் எவ்வளவு மியூச்சுவல் பண்ட் மூலமாக எவ்வளவு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும் என்பதையும் அவருக்கு வழங்குகிறோம். முதலீட்டாளர்கள் கேட்டுக்கொள்வதன் அடிப்படையில் அவர்களுக்கு இந்த தகவல் வழங்கப்படும்.

உங்களுடைய பிஸினஸ் மாடல் என்ன?

நாங்கள் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் அல்லது விநியோகஸ்தர்களிடம் இருந்து எந்த தொகையும் வாங்குவதில்லை. இந்த தகவல்களை பராமரிப்பதற்காக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எங்களுக்கு கணிசமான தொகையை வழங்குகின்றன. இதுதான் எங்களுக்கான வருமானம்.

மியூச்சுவல் பண்ட்கள் கொடுப்பதுதான் வருமானம் என்றால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வேறு சேவை நிறுவனங்களுக்கு மாறமாட்டார்களா?

நிறுவனங்கள் மாறலாம். ஆனால் எங்களிடம் சிறந்த தொழில்நுட்பம் இருக்கிறது. சிறந்த சேவையை வழங்குகிறோம். தவிர பல புதிய புராடக்ட்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு மைகேம்ஸ் என்னும் செயலியை அறிமுகம் செய்திருக்கிறோம்.

தகவல் திருட்டு தற்போது அதிகம் நடந்து வருகிறது. உங்கள் நிறுவனத்தில் தகவல் திருட்டு நடக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்?

எங்களுடைய தொழில்நுட்பம் எப்படி இருக்கிறது, இதனை தகர்க்க முடியுமா என்பதையும் மூன்றாம் நபரை வைத்து சோதிக்கிறோம். மேலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் எங்களுடைய தொழில்நுட்பம் குறித்து ஆடிட் செய்வார்கள். தவிர தர மதிப்பீட்டு நிறுவனங்களும் எங்களுடைய தொழில்நுட்பம் குறித்து மதிப்பீடு செய்வார்கள்.

உங்களிடம் அனைத்து வகையான வசதிகளும் இருக்கின்றன. நீங்கள் ஏன் மியூச்சுவல் பண்ட் விநியோகம் செய்யக் கூடாது?

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூவரும் எங்களுடைய பங்குதாரர்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையான தொழிலில் நாங்கள் ஈடுபட மாட்டோம். தவிர இவர்கள் மூவருக்கும் நாங்கள் வழங்குவது சேவையே தவிர, பொருட்களை விற்பதல்ல. ஒருவேளை நாங்கள் மியூச்சுவல் பண்ட்களை விற்க ஆரம்பித்தால், எங்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது என்று அனைவரும் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எங்களுடைய மைகேம்ஸ் செயலியில் நீங்கள் மியூச்சுவல் பண்ட் வாங்கலாம். இதற்கு நாங்கள் எந்த கமிஷனும் வாங்குவது கிடையாது. அதே சமயம் எந்த பண்டில் முதலீடு செய்யலாம் என்று கேட்டால் நாங்கள் சொல்ல மாட்டோம். மற்ற இணைய தளங்களில் ஒப்பீடு, ரேட்டிங் இருக்கும். ஆனால் நாங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை மட்டுமே வழங்குகிறோம். விஷயம் தெரிந்த முதலீட்டாளர்கள் நேரடியாக வாங்கலாம்.

ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. மேலும் நிறுவனங்கள் தேவையா?

மியூச்சுவல் பண்ட் துறையில் புதிய நிறுவனங்கள் தேவையே இல்லை என்னும் முடிவுக்கு நாம் வரத்தேவையில்லை. காரணம் இந்த துறையில் எந்த நிறுவனம் புதுமையை கொண்டுவரும் என கணிக்க முடியாது. அதற்கான புதிய நிறுவனங்களை நாம் வர வேற்கலாம்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x