

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் சரிந்திருக்கிறது. ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.5,950 கோடியாக இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6,318 கோடியாக நிகர லாபம் இருந்தது. ராய்ட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் நிகர லாபம் ரூ. 6,181 கோடியாக இருக்கும் என தெரிவித்திருந்தனர். ஆனால் கணிப்பை விட அதிகமாகவே லாபம் சரிந்திருக்கிறது.
ரூபாய் மதிப்பு உயர்ந்திருப்பதால் ரூ.650 கோடி அளவுக்கு வருமானத்தில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக டிசிஎஸ் அறிவித்திருக்கிறது.
நிறுவனத்தின் வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் வருமானம் ரூ.30,280 கோடியாக இருந்தது. இந்த ஜூன் காலாண்டில் சிறிதளவு உயர்ந்து ரூ.30,543 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிறுவனத்திலிருந்து வெளியேறுவோர் விகிதம் 11.6 சதவீதமாக இருக்கிறது. ஜூன் காலாண்டு முடிவில் 3,85,809 பணியாளர்கள் இருக்கின்றனர். ஒரு பங்குக்கு ரூ.7 டிவிடெண்ட் வழங்குவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.28 சதவீதம் டிசிஎஸ் பங்கு உயர்ந்தது. டிசிஎஸ் நிறுவனத்தில் லே-ஆப் எதுவும் நடைபெறவில்லை என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்தார்.