Last Updated : 11 Jul, 2017 10:53 AM

 

Published : 11 Jul 2017 10:53 AM
Last Updated : 11 Jul 2017 10:53 AM

உள்ளூர் விமானங்களில் அசைவ உணவு கிடையாது: ஏர் இந்திய நிறுவனம் அறிவிப்பு

தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் உள்ளூர் விமான சேவைகளில் இனி அசைவ உணவு வழங்கப்படமாட்டாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளூர் விமானங்களில் குறைந்த கட்டண பிரிவில் (எகானமி) பயணம் செய்பவர்களுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பிஸினஸ் மற்றுக் எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணிப்பவர்களுக்கு தொடர்ந்து அசைவ உணவு வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் உணவுப் பொருட்கள் மிச்சமாவது மற்றும் செலவை குறைத்து சமையல் சேவையில் தரத்தை உயர்த்தலாம் என ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவு பரிமாறுவது போன்ற சங்கடங்களை இதன் மூலம் தவிர்க்க முடியும். இது போன்று கடந்த காலங்களில் நடந்துள்ளது என ஏர் இந்தியா கூறியுள்ளது.

``ஏர் இந்தியா போன்ற முழுநேர விமான சேவை நிறுவனம் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. குறைந்த கட்டணங்களை விதிக்கும் விமான நிறுவனங்கள் கூட பயணிகளுக்கு உணவு தேர்வை வழங்குகிறது. ஏர் இந்தியா நிறுவன பயணிகளிடம் கருத்துகளை கேட்ட பின்னர் இது போன்ற முடிவை எடுக்க வேண்டும். தற்போது எடுத்துள்ள முடிவை திரும்ப பெற வேண்டும்,’’ என்று ஏர் இந்தியா பயணிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மகேஷ் ஒய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஷாங்காய்-டெல்லி-மும்பை விமானத்தில் பயணிகள் சைவ உணவை விருப்பமாக குறிப்பிட்டிருந்தாலும் அசைவ உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவால் ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தால் சேமிக்க முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானம் உணவுக்காக 400 கோடி ரூபாய் செலவு செய்கிறது என அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x