Published : 26 Jul 2017 09:35 AM
Last Updated : 26 Jul 2017 09:35 AM

ரூ. 1,500 கோடியை செலுத்த சஹாரா குழுமத்துக்கு கெடு

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ரூ.1,500 கோடி தொகையை செப்டம்பர் 7-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு சஹாரா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபலிடம் இந்த உத்தரவை தெரிவித்தது. ஜூலை 15-ம் தேதிக்குள் ரூ. 552 கோடி தொகையை செலுத்துவதாக முன்னதாக சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் இதுவரையில் ரூ. 247 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதில் எஞ்சியுள்ள ரூ. 305 கோடியை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் குறிப்பிட்டனர்.செப்டம்பர் 7-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய ரூ.1,500 கோடி தொகையில் எஞ்சியுள்ள ரூ. 305 கோடி தொகையும் அடங்கும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய்க்கு வழங்கப்பட்டிருந்த ஜாமின் காலத்தை அக்டோபர் 10 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர். சஹாரா குழுமத்தின் பிரதான சொத்தான ஆம்பி வேலி விற்பனை தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் நியமித்த விற்பனையாளர் அதை விற்பதற்கான நடவடிக்கையை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலை 5-ம் தேதி சுப்ரதா ராய் ரூ. 710.22 கோடி தொகையை செபி-சஹாரா கணக்கில் செலுத்தியதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டது. ஆனால் ரூ. 552.21 கோடிக்கு வழங்கப்பட்ட காசோலை ஜூலை 15-ம் தேதிக்குள் செல்லுபடியாக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக நீதிமன்றத்தில் ரூ. 1,500 கோடியை ஜூன் 15-ம் தேதிக்குள்ளாகவும், ஒரு மாத காலஇடைவெளியில் ரூ. 552.22 கோடியை செலுத்துவதாகவும் சுப்ரதா ராய் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு மே 6-ம் தேதி முதல் சுப்ரதா ராய் ஜாமினில் உள்ளார். .-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x