

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 9 ஆண்டு உச்சத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டண அறிவிப்பை அறிவித்ததை தொடர்ந்து இந்த ஏற்றத்தை அடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 1.02 சதவீதம் உயர்ந்து 1,510 ரூபாயில் முடிவடைந்தது. நேற்று வர்த்தகத்தின் இடையே 1.95 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,525 வரை உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 5,018 கோடி உயர்ந்தது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாக இருக்கிறது.
நடப்பாண்டில் சென்செக்ஸ் 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் பங்கு 41 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு ஒரு பங்கின் விலை ரூ.1,525 என்னும் விலையை தொட்டது. நிறுவனங்களின் சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் டிசிஎஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.73 லட்சம் கோடி. அடுத்த இடங்களில் ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ ஆகியவை இருக்கின்றன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்ந்து 31804 புள்ளியிலும், நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 9816 புள்ளியிலும் முடிவடைந்தன. ஆயில் அண்ட் கேஸ் குறியீடு அதிகபட்சமாக உயர்ந்தது. ஐடி மற்றும் டெக்னாலஜி குறியீடு சரிந்து முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் ஹெச்யுஎல், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.