Published : 26 Mar 2014 11:07 AM
Last Updated : 26 Mar 2014 11:07 AM

பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகம்

இந்திய பங்கு சந்தையில் செவ்வாய்க்கிழமை மந்தமான வர்த்தகமே நடைபெற்றது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 0.27 புள்ளிகள் சரிந்து 22055 புள்ளியில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 6589 புள்ளியில் முடிவடைந்தது.

இருந்தாலும் வர்த்தகத்தின் இடையே இரண்டு சந்தைகளும் புதிய உச்சத்தை அடைந்ததன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 22079 புள்ளிகளும், நிஃப்டி 6595 புள்ளிகளும் அதிகபட்சமாக சென்றது. கேப்பிடல் குட்ஸ், மின் துறை, ரியால்டி, கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய துறை பங்குகள் ஏற்றமடைந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், ஹெல்த்கேர் ஆகிய குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன.

பி.ஹெச்.இ.எல். டி.எல்.எஃப்., ஹீரோ மோட்டோ கார்ப், ஜிண்டால் ஸ்டீல், ரான்பாக்ஸி ஆகிய பங்குகள் நிஃப்டி பங்குகளில் ஏற்றம் அடைந்தவை. மாறாக ரிலையன்ஸ், விப்ரோ, அம்புஜா சிமென்ட்ஸ், சேசா ஸ்டெர்லைட், எம் அண்ட் எம். ஆகிய பங்குகள் சரிந்தன. மொத்தத்தில் 1265 பங்குகள் ஏற்றத்திலும், 1700 பங்குகளும் சரிவிலும், 180 பங்குகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் முடிந்தன.

ஜப்பான் பங்குச்சந்தையான நிக்கி 0.4 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. ஆசியாவின் மற்ற முக்கிய சந்தைகளும் சரிவுடனே முடிவடைந்தன. இருந்தாலும் ஷாங்காய் காம்போசிட் குறியீடு சிறிதளவு உயர்ந்து முடிந்தது. ஆசிய பங்குச்சந்தைகளில் மந்தமான நிலைமை இருந்தாலும், ஐரோப்பாவின் முக்கியமான பங்குச்சந்தைகளின் வர்த்தகம் சரிவுடன் ஆரம்பித்தாலும், அதன் பிறகு உயர ஆரம்பித்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய் கிழமை அன்றும் உயர்ந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் 30 காசுகள் உயர்ந்து ஒரு டாலர் 60.48 ரூபாயில் முடிவடைந்தது. தேர்தலுக்கு பிறகு நிலையான மத்திய அரசு அமையும் என்றும், அதன் காரணமாகதான் அந்நிய முதலீடு வருகிறது, இதுதான் பங்குச்சந்தை ஏற்றத்துக்கும் ரூபாய் மதிப்பு உயர்வதற்கு காரணம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 18 மாதங்களில் மத்திய அரசு எடுத்த நிலையான நடவடிக்கைகள்தான் இந்திய பொருளாதாரத்துக்கு பலத்தை கொடுத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெடில் மத்திய அரசு அறிவித்த 10 அம்ச கொள்கைகளை, புதிதாக அமையும் அரசு, பின்பற்றும் போதுதான் நம்பிக்கை அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x