Published : 30 Jun 2016 06:08 PM
Last Updated : 30 Jun 2016 06:08 PM
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமைப் பதவிக்காலம் போல் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ரகுராம் ராஜன் நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் 9 வாரங்களில் ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து 3 ஆண்டு கவர்னர் பதவிக்காலம் என்பது குறைவானது என்றும் இது 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவிடம் பொருளாதாரத்தின் பல்வேறு நிலைமைகள் குறித்தும் வங்கிகளின் வாராக்கடன்கள் குறித்தும் ரகுராம் ராஜன் கூறியதாகவும் அப்போது உறுப்பினர்கள் ஆர்பிஐ கவர்னர் பதவிக்காலம் குறித்து கேட்ட போது, தற்போதைய 3 ஆண்டுகாலம் என்பது குறைவானதே என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளதாக தெரிகிறது.
5 ஆண்டுகாலமாக இருக்கலாமா என்று கேட்டப்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் போன்று 4 ஆண்டுகாலம் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது.
வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிதிநிலைக்குழு கூட்டம் சுமார் 3 மணி நேரங்கள் நடைபெற்றதாகவும் இதில், ரகுராம் ராஜன் பொருளாதார நிலைமை, சீர்த்திருத்தங்கள், ஆர்பிஐ மறுகட்டமைப்பு, வங்கிகள் துறை சந்திக்கும் சவால்கள், மற்றும் முன்னேற்றத்துக்கான வழிவகைகள் ஆகியவற்றை பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
2016-17-ல் வங்கிகளின் செயலில் இல்லாத சொத்துக்கள் மதிப்பு 9.3% ஆக அதிகரிக்கும் என்று ஆர்பிஐ எச்சரித்திருந்தது. இந்நிலையில் எம்.பி.க்கள் குழுவிடம் ரகுராம் ராஜன் கூறியதாக வெளிவந்துள்ள செய்திகளின்படி, தனியார் நிறுவனங்கள் செயல்பூர்வமாக இருக்கின்றன, கடன்களை அளிக்கின்றன, ஆனால் போதிய நிதி இருந்தும் பொதுத்துறை வங்கிகள் கடன் அளிப்பதில் மந்த நிலை உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.
மேலும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் விவகாரத்தினால் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன என்பதையும் எம்.பி.க்களிடம் ராஜன் விளக்கியுள்ளார்.
முன்னதாக இன்று (வியாழன்) நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வட்டி விகிதம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT