Published : 13 Sep 2016 10:45 AM
Last Updated : 13 Sep 2016 10:45 AM
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமல்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்கான வரி விகிதத்தை ஆலோசனைகளுக்கு பிறகு இந்த குழு முடிவு செய்யும். இதன் மூலம் ஜிஎஸ்டி 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு டிவிட்டரில் கருத்து கூறியுள்ள அரசின் செய்தி தொடர்பாளர், ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த தகவலில் அரசுதுறை செயலர்களைக் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கவுன்சிலின் முதல் கூட்டம் செப்டம்பர் 22 அல்லது 23ம் தேதி நடக்க உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய விஷயங்களை இந்த குழு பரிந்துரைக்கும். முக்கியமாக எந்த பொருட்களுக்கு, எவ்வளவு வரி விகிதம் என்பதை முடிவு செய்யும்.
இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நகர்வு என்று கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான அடுத்த கட்ட தேவைகளை இந்த நடவடிக்கை மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த குழுவின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கான தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த குழுவின் மொத்த செலவுகளையும் மத்திய அரசு ஏற்கும். ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான இந்த குழுவில் உள்ள செயலர்கள், அதிகாரிகளை மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் இருந்து தேவைக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள்.
அரசியல் சட்டத்திருத்தம் 279 ஏ-ன் படி ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலுக்கான அலுவலகம் புதுடெல்லியில் இயங்கும்.
வருவாய் துறை செயலர் ஜிஎஸ்டி கவுன்சிலில் செயலாளராக இருப்பார். மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு கூடுதல் செயலர் மற்றும் நான்கு கமிஷனர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
சட்டத் திருத்தம் 279 ஏ-ன் படி ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தும். மத்திய நிதி அமைச்சர் இதன் தலைவராக இருப்பார். தவிர மத்திய வருவாய் துறை இணையமைச்சர் இந்த குழுவில் இருப்பார். நிதி மற்றும் வரித்துறை இணை அமைச்சரும் அல்லது மாநில அரசு பரிந்துரை செய்யும் அமைச்சர் ஒருவரும் இருப்பார்.
இந்த கவுன்சில் மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய பரிந்துரைகளை வழங்கும். குறிப்பாக ஜிஎஸ்டி யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டியவை, மாதிரி ஜிஎஸ்டி சட்டம், ஜிஎஸ்டி விகிதம், சிறப்பு வரி, கூடுதல் வாய்ப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட அரசுக்கு அளிக்கும் விதமாக செயல்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT