Published : 13 Jan 2014 10:46 AM
Last Updated : 13 Jan 2014 10:46 AM

நிலையான வருவாய் தரும் மியூச்சுவல் ஃபண்ட்கள்

கடந்த வாரம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் மிகவும் குறைவான ரிஸ்க் உள்ள ஃபண்டுகளைப் பற்றிப் பார்த்தோம். அதே கடன் சார்ந்த ஃபண்டுகளில் சற்று ரிஸ்க் அதிகமாக எடுக்க முடியும் (அதிக வருமானத்திற்காக) என நினைப்பவர்கள் கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் (Credit Opportunities) மற்றும் கில்ட் ஃபண்டுகளில் (Gilt Funds) முதலீடு செய்யலாம். ஆனால் இவ்விதமான ஃபண்டுகளில் நுழையும் மற்றும் வெளியேறும் நேரம் முக்கியம் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில், ஃபிக்ஸட் டெபாஸிட்டைப் (Fixed Deposit) போல உறுதியான வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள், எஃப்.எம்.பி (FMP - FIXED MATURITY PLANS) திட்டங்களில் முதலீடு செய்யலாம். இத்திட்டங்களில் ரிஸ்க் இல்லை என்றே கூறலாம். வட்டியும் ஃபிக்ஸட் டெபாஸிட்டுகளுக்கு சமமாகக் கிடைக்கும். முதிர்வு காலம் பொதுவாக ஒரு மாதத்திலிருந்து ஐந்து வருடங்கள் வரை. ஆனால் இத்திட்டங்களில் உள்ள ஒரு அசௌகரியம் என்னவென்றால், முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுப்பது சிரமம்.

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மக்கள் அதிகம் நாடிச் செல்வதற்கு என்ன காரணம்? வருமான வரி அதிகமாக செலுத்துபவர்களுக்கு கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம். ஃபிக்ஸட் டெபாஸிட்டுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த வருமான வரியையே செலுத்த வேண்டி இருக்கும். ஃபிக்ஸட் டெபாஸிட்டிலிருந்து வரும் வட்டி வருமானத்திற்கு அவரவர் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி கட்டவேண்டி இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் ரூ 1 லட்சம் வங்கி டெபாஸிட்டில் முதலீடு செய்தால், அவருக்கு சுமாராக ரூ.9,000 வட்டி வருமானம் கிடைக்கும். உச்சபட்ச வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இந்த வட்டி வருமானத்தில் ரூ 2,700 (30%) வரியாக சென்று விடும்.

ஆகவே அவருக்கு நிகராக கைக்கு கிடைப்பது ரூ 6,300 தான். அதே நபர் அந்த 1 லட்சத்தை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது, வரும் வருமானத்திற்கு பணவீக்கத்தை அட்ஜஸ்ட் செய்த பிறகு உள்ள வருமானத்திற்கே வரி செலுத்த வேண்டி இருக்கும். நாம் மேலே கண்ட நபர், அதே 1 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள எஃப்.எம்.பி (FMP) திட்டத்தில் முதலீடு செய்தார் என்றால் அவருக்கு அதே ரூ 9,000 வருமானம் கிட்டும். அவர் முதலீடு செய்த ஆண்டில் பணவீக்கம் 7% ஆக இருந்தால், ரூ 7,000 பணவீக்க அட்ஜஸ்ட்மெண்டாக எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே வருமானமாகக் கருதப்படுவது ரூ 2,000 (9,000 – 7,000 = 2,000) மட்டும்தான். அந்த 2,000–ற்கு 20% வரி கட்டினால் போதுமானது.

ஆக அதே நபர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து இருந்தால் வெறும் ரூ 400-ஐத்தான் (2000 X 20%) வரியாகச் செலுத்தி இருப்பார். அவரது கைக்கு நிகராக 8,600 ரூபாய் (9,000 – 400 = 8,600) கிடைத்து இருக்கும். ஆக அவருக்கு நிகர சேமிப்பு ரூ 2,300 ஆகும். இதுதான் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு உள்ள மிகப்பெரிய கவர்ச்சி. இதன் காரணமாகத்தான் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. உறுதியான வருமானம் எனக்கு கட்டாயமாகத் தேவை என நினைப்பவர்கள் கடன் சார்ந்த திட்டங்களில் கீழ்கண்ட மியூச்சுவல் ஃபண்டு வகைகளில் மட்டும் முதலீடு செய்யவும்.

லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள், எஃப்.எம்.பி. பிற வகையான கடன் திட்டங்களில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது சகஜம். ஆனால் நீண்ட காலத்தில் ஒரு நிலையான வருவாயைத் தரும். அதற்கு மேல் இன்னும் ஒரு பெரிய கவர்ச்சி: பிஃக்ஸட் டெபாஸிட்டுகளில் முதலீடு செய்யும் பொழுது நீங்கள் வருடாவருடம் வட்டியை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் வருமான வரியை செலுத்த வேண்டும். ஆனால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது, எந்த வருடத்தில் பணத்தை வெளியில் எடுக்கிறீர்களோ, அந்த வருடத்தில் வரியை கட்டினால் போதுமானது – அதுவும் பணவீக்கத்தை அட்ஜஸ்ட் செய்த பிறகு! அதுவரை அந்த வருமானவரி கட்ட வேண்டிய தொகைக்கு, நமக்கு கிடைக்கும் வட்டி லாபம் தானே?

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x