Published : 23 Sep 2013 03:09 PM
Last Updated : 23 Sep 2013 03:09 PM

மியூச்சுவல் ஃபண்ட் - எளிய மனிதர்களுக்கான எளிய திட்டம்

ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் (நிச்சயமற்ற தன்மையின் விளைவுகளை எதிர்கொள்வது) இருக்கிறது. அதில் முதலீடு செய்யப்படும் அனைவருக்கும் ஒரே ரிஸ்க் தான். உதாரணத்துக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். அதே போல எதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். இதே போலத்தான், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையான முதலீடுகள் இருந்தாலும் அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமமாகதான் இருக்கும். ஆனால் உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.

ரிஸ்கே எடுக்க வேண்டாம், குறைந்த வருமானம் போதும் என்று நீங்கள் நினைத்தாலும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, உங்களின் ரிஸ்க் அளவிற்கு ஏற்றதுபோல இங்கு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் சொத்துகள்/பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தாண்டியும் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.

முதலீட்டு முறை:

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய மாதம் 500 ரூபாய் கூட போதும். (சில ஃபண்ட்களில் மாதம் 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்). உங்கள் வசதிக்கு ஏற்ற தேதியில் இ.சி.எஸ். கொடுத்துவிட்டால் போதும், தானாக முதலீடு செய்யப்பட்டுவிடும். இதற்கு ’’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்”(எஸ்.ஐ.பி.) என்று சொல்லுவார்கள். அதேபோல சில வருடங்களுக்கு முதலீடு செய்தபிறகு, முதலீடு செய்த தொகையை ஒவ்வொரு மாதமும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்.

குறைந்த ரிஸ்க் அதிக வருமானம்!

வங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது 9 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும். ஆனால் பங்குச்சந்தை அதிக லாபம் வர வாய்ப்பு இருக்கிற அதே சமயத்தில் அதிக நஷ்டமும் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அந்த பணத்தை ஒரு பங்குகளிலோ அல்லது இரண்டு பங்குகளிலோதான் முதலீடு செய்ய முடியும். இது ரிஸ்க்கான விளையாட்டு. இதில் ஒரு பங்கு சரிவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் இந்த ரிஸ்க் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகையை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒரு சில பங்களில் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளைப் பார்க்கும் போது சில ஃபண்ட்கள் அபரிமிதமான வருமானத்தை கொடுத்திருந்தாலும், 12 சதவிகித வருமானத்துக்கு மேலே கொடுத்திருக்கும் ஃபண்ட்கள் சந்தையில் நிறையவே இருக்கின்றன. (அதற்கான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான உத்தரவாத வருமானமும் கிடையாது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்)

வரிச்சலுகை

மாதச் சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று வரி கட்டுவது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர்களின்பாடு திண்டாட்டம்தான். வரி சேமிப்புக்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80சி பிரிவின் கீழ் ஒரு நிதிஆண்டுக்கு அதிகபட்சம் 1லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். (புதிய நேரடி வரிவிதிப்பு முறை வரும் போது இந்த திட்டம் இருக்காது என்று சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அந்த சட்டம் அமல்படுத்தபடவில்லை)இந்த முதலீட்டினை மூன்று வருடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். சந்தையில் இருக்கும் மற்ற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்த காலம் மிக குறைவு.

விரைவில் பணம்!

இதில் முதலீடு செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். (சில திட்டங்களுக்கு ’’லாக் இன்” காலம் இருக்கிறது, அது முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும்) இதற்கான விண்ணப்பத்தை கொடுத்த இரண்டு வேலை நாட்களில் பணம் கிடைத்துவிடும்.

சேமிப்பை பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x