Published : 04 Oct 2013 05:15 PM
Last Updated : 04 Oct 2013 05:15 PM

சிக்கன நடவடிக்கையில் சிதம்பரம் தீவிரம்

பொருளாதார தேக்க நிலை நிலவி வரும் சூழலில் அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். ரூ. 20,000 கோடி வரையிலான அரசு செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அக்டோபர் மாத இறுதியில் அரசுக்கு வரும் வரி வருமானத்தைக் கணக்கில் கொண்டு இந்த விஷயத்தில் திட்டவட்டமான முடிவை சிதம்பரம் எடுப்பார் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் அதேசமயம், அரசின் திட்டப் பணிகள் பாதிக்கப்படாவகையில் பார்த்துக்கொள்வார் என்றே தோன்றுகிறது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் உணவு மானியம் உள்ளிட்டவற்றை இவர் குறைக்க மாட்டார் என்றே தெரிகிறது.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபி-யில் 4.8 சதவீத அளவுக்கு இருக்கும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.

பற்றாக்குறை அதிகரிப்பு காரணமாக இந்தியாவின் கடன் திரும்ப செலுத்தும் திறன் குறித்து ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம் அளித்த சான்றிதழ் கவலையளிப்பதாக உள்ளது. மேலும் இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 20 சதவிகித அளவுக்குச் சரிந்ததும் பெரும் பின்னடைவாக அமைந்தது.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேசுகையில் சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளார் சிதம்பரம். அதேசமயம் பட்ஜெட் இலக்கையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்ணெய் மானியம் ரூ. 30,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதால் அரசு தனது செலவினத்தை ரூ. 20,000 கோடி வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சேமிப்பு அளவு ரூ. 30,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை உறுதி செய்யும் வகையில் அரசு பங்குகளை விற்பனை செய்வது மெதுவாக நடைபெறுவதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் செலவைக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு துறையும் அவற்றுக்கென வழங்கப்பட்ட நிதிக்குள் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே சிக்கன நடவடிக்கையாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார்.

அதேபோல அரசு அதிகாரிகளின் பயணத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த ஆண்டு ரூ. 10,000 கோடி வரை மீதமாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x