Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

குறையும் வர்த்தக பற்றாக்குறை: நவம்பர் மாத பற்றாக்குறை 921 கோடி டாலர்கள்

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 5.86 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. பெட்ரோலியப் பொருள், கச்சா வைரம் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதேபோல ஏற்றுமதி, இறக்குமதி இடையிலான இடைவெளி (பற்றாக்குறை) தங்கம் இறக்குமதி குறைவு காரணமாக வெகுவாகக் குறைந்துள்ளதாக வர்த்தகச் செயலர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருள்கள், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, பார்மா ஆகிய பொருள்களின் ஏற்றுமதி குறைந்ததால், நவம்பர் மாதம் ஏற்றுமதி சரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2,460 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 2,325 கோடி டாலராக இருந்தது.

நவம்பர் மாதத்தில் இறக்குமதி அளவு 16.3 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 921 கோடி டாலராகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் பற்றாக்குறை 676 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் அளவு 3,383 கோடி டாலராகும். மார்ச் 2011-க்குப் பிறகு இந்த அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை குறைந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,720 கோடி டாலராக இருந்தது. நடந்து முடிந்த நவம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 921 கோடி டாலராகக் குறைந்துள்ளது

கடந்த மாதத்தில் தங்கம், வெள்ளி இறக்குமதி 80.49 சதவீதம் குறைந்தது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இறக்குமதி குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு நவம்பரில் 540 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வெள்ளி அளவு இந்த ஆண்டு நவம்பரில் 105 கோடி டாலராகக் குறைந்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி 1.1 சதவீதம் குறைந்து 1,296 கோடி டாலராக இருந்தது.

கச்சா வைரத்தின் விலை உயர்வு காரணமாக ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி ஏற்றுமதி சரிந்ததாக ராவ் கூறினார்.

கச்சா வைரத்தின் விலை பெருமளவு உயர்ந்ததால் கடந்த மாதத்தில் கச்சா வைரக் கற்கள் வாங்குவதை வர்த்தகர்கள் பெரிதும் தவிர்த்தனர். இதனால் ஏற்றுமதியும் குறைந்தது.

பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதி குறைந்ததற்கு, சில எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இயந்திர பராமரிப்பு காரணமாக ஆலைகளை மூடியிருந்தன. இதுவும் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று ராவ் தெரிவித்தார்.

வரும் மாதங்களில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று ஜவுளி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் 6.27 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி 20,400 கோடி டாலரை எட்டியுள்ளது. இதே காலத்தில் இறக்குமதி 30,400 கோடி டாலராகும். இந்த காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 10,000 கோடி டாலராகும்.

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 11.8 சதவீதம் சரிந்து 470 கோடி டாலரைத் தொட்டது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 530 கோடி டாலராக இருந்தது.

சில உள்நாட்டு கட்டுப்பாடுகள் காரணமாக மருந்து பொருள் ஏற்றுமதியில் சரிவு காணப்பட்டதாக ராவ் கூறினார்.

டிசம்பர் மாதத்திலிருந்து பெட்ரோலியப் பொருள்கள், மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் தங்கம், வெள்ளி 2,550 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 3,350 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 32,500 கோடி டாலரை நிச்சயம் எட்டுவோம் என்று ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசு நிர்ணயித்துள்ள ஏற்றுமதி இலக்கை எளிதாக எட்டுவோம் என்று ஏற்றுமதி மேம்பாட்டு சம்மேளனத்தின தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 14,000 கோடி டாலர் முதல் 15,000 கோடி டாலர் வரை இருக்குமாயின் அது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 5,000 கோடி டாலர் முதல் 6,000 கோடி டாலர் வரைக் குறைக்க உதவும் என்று ரஃபீக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x