Last Updated : 13 Feb, 2014 01:12 PM

 

Published : 13 Feb 2014 01:12 PM
Last Updated : 13 Feb 2014 01:12 PM

பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அரசு வருவாய் - என்றால் என்ன?

அரசின் வரியல்லாத வருவாய்களில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் லாபம்/உபரி, முக்கியமானவை என்று பார்த்தோம்.

சுதந்திரத்திற்குபின், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இவற்றை, ‘நவீன இந்தியாவின் கோவில்கள்' என்று 1948 இல் ஜவஹர்லால் நேரு பெருமையாக அழைத்தார். 1990 வரை, லாப நோக்கத்தைவிட, சமுக பொருளாதார வளர்ச்சியே இந்நிறுவனங்களின் முக்கிய நோக்கங்களாக கருதப்பட்டன.

ஆனால் புதிய பொருளாதார கொள்கைகள் அமல் செய்யப்பட்டபின், இந்நிறுவனங்கள் திறமையாக செயல்பட்டு நஷ்டங்களைத் தவிர்த்து லாபமும் ஈட்ட வேண்டும் எனும் நோக்கத்திற்காக இதன் பங்குகளில் சில சதவீதங்கள் தனியாருக்கு விற்பனை (Disinvestment) செய்யப்பட்டன; மாருதி போன்றவை முழுவதுமாக தனியாருக்கு விற்கப்பட்டது.

இன்றைக்கு, சுமார் 249 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs), ரயில், எஃகு, எண்ணெய், சுரங்க மற்றும் தாதுக்கள், விவசாயம், உற்பத்தி, விவசாயம், கட்டுமானம், மின்சாரம், சேவை துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு 5.8 லட்சம் கோடி ருபாய் ஆகும். இன்றைக்கும் இந்நிறுவனங்களின் பங்களிப்பு அரசு வருவாய்க்கு உதவுகின்றன.

2009-10 நிதியாண்டில் இந்நிறுவனங்களின் வருமானம் ரு.12.72 லட்சம் கோடி, லாபம் ரு.1.08 லட்சம் கோடி, சிலவற்றின் நஷ்டம் ரு. 15,842 கோடி. இருப்புக்கள் மற்றும் உபரி ரு.6.05 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்நிறுவனங்களின் இலாப விகிதமும் ஈவுத்தொகைகளும் தனியார் நிறுவனங்களுக்கு நிகரானவை.

இவை மட்டுமின்றி, சுங்க வரி, கலால் வரி, நிறுவனங்களின் வருமான வரி, போன்ற பல்வேறு வரிகள் மூலமாகவும் ஈவுத்தொகை, பங்கு விற்பனை மூலமாகவும் அரசின் வருவாய்க்கு இந்த பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் பங்களிக்கின்றன.

மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 1,160 உள்ளன; இவற்றின் மொத்த முதலீடு (மார்ச் 2008 வரை) ரு.3.7 லட்சம் கோடியாகும். இவை பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை. இவற்றில் சுமார் 850 நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக மூடப்படக்கூடிய சூழலில் உள்ளன. இருந்தபோதும் இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் பொது பயன்பாடுகள் மிகவும் அதிகமுள்ள மின்சாரம், போக்குவரத்து, தண்ணீர், சுகாதாரம் போன்ற துறைகளில் உள்ளதால் அவற்றின் பங்களிப்பு பொது சமூக நலனுக்கு மிகவும் இன்றியமையானது ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x