Last Updated : 04 Jan, 2014 11:06 AM

 

Published : 04 Jan 2014 11:06 AM
Last Updated : 04 Jan 2014 11:06 AM

மில்டன் பிரீட்மனின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன?

கெய்ன்ஸுக்கு அடுத்தபடியாக இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பொருளியல் அறிஞராக விளங்கியவர் மில்டன் பிரீட்மன் (1912-2006). கெய்ன்ஸுக்கு எதிர்மறையான கொள்கைகளைக் கொண்டவராக பிரீட்மன் இருந்தார். 1957இல் A Theory of the Consumption Function என்ற மிக முக்கியமான புத்தகத்தை வெளியிட்டார். ஒருவரின் நிகழ்கால வருவாய்க்கு ஏற்றவாறு நுகர்வை மாற்றிக்கொள்வார் என்ற கெய்ன்சின் சிந்தனைக்கு மாற்றாக ஒருவர் தன் வாழ்நாளில் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கு ஏற்ப நுகர்வை மாற்றிக்கொள்வார் என்ற சிந்தனையை பிரீட்மன் முன் வைத்தார்.

பிரீட்மனின் அடிப்படை சிந்தனையே, ஒரு சந்தை பொருளாதாரத்தில் எவ்வித கட்டுபாடுகளும் இல்லாமல் இருந்தால் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி அடையும் என்பதாகும். இது தொடர்பாக அவர் எழுதிய Capitalism and Freedom மற்றும் Free to Choose ஆகிய புத்தகங்கள் பொதுமக்களிடம் கூட பெரும் வரவேற்பைப் பெற்றன.

பிரீட்மன் பணம் தொடர்பாக செய்த ஆய்வுகள் அவரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றன. அப்போது பண அளிப்பை அதிகரித்து பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்ற கெய்ன்ஸின் கொள்கை வலுவாக இருந்த நேரம். பண அளவுக்கு சமமாக பொருளாதாரத்தில் பணவீக்கம் நிலவும், எனவே பண அளிப்பை அதிகரித்து பொருளாதாரத்தில் உற்பத்தியை உயர்த்த முடியாது என்று பிரீட்மன் கூறினார்.

மிகக் குறுகிய காலத்தில் வேண்டுமானால், பண அளிப்பு ஓரளவிற்கு உற்பத்தியை உயர்த்தலாம், ஆனால் நீண்ட காலத்தில் பண அளிப்பு விலைவாசியை மட்டும் உயர்த்தும் என்ற சிந்தனையில் பிடிப்புடன் பிரீட்மன் இருந்தார். Studies in the Quantity Theory of Money மற்றும் Monetary History of the United States, 1867-1960 என்ற இரண்டு புத்தகங்கள் மூலம் இந்த சிந்தனைகளை தெரிவித்தார்.

1960களில் பிலிப்ஸ் வலைக்கோடு என்ற கோட்பாடு பிரபலமாக இருந்தது. இதன்படி, வேலையின்மைக்கும், பணவீக்கத்திற்கும் எதிர்மறை உறவு இருப்பதாக நம்பப்பட்டது. அதாவது, வேலையின்மையைக் குறைத்து உற்பத்தியை அதிகமாக்கினால், அதனுடன் பணவீக்கமும் ஏற்படும் என்பது இக்கோட்பாடு. வேறுவிதமாக சொல்வதானால், பணவீக்கத்தைக் குறைக்க முற்பட்டால், வேலையின்மை உயரும். 1960களின் பிற்பகுதியில் இதற்கு மாற்றுக் கருத்தை பிரீட்மன் கூறினார்.

பணவீக்கத்தை உயர்த்தி வேலையின்மையை குறைத்தால், சிறிதுகாலத்திற்கு பிறகு பணவீக்கத்திற்கு ஏற்ப மக்கள் நுகர்வை மாற்றிக்கொண்டால், மீண்டும் பணவீக்கத்தை அதிகப்படுத்தியே வேலையின்மையை குறைக்கமுடியும். இவ்வாறு தொடர்ந்து பணவீக்கம் அதிகமாக இருக்கவேண்டிய சூழல் உருவாகும் என்றார். 1970களில் நிலவிய பணவீக்கத்துடன் கூடிய வேலையின்மை, (இதனை stagflation என்றனர்) பிரீட்மனின் கூற்றை உண்மையாக்கியது. நம் நிகழ்கால பொருளியல் சிந்தனையில் பிரீட்மனின் பெரிய தாக்கம் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. 1976-ம் ஆண்டு இவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x