Published : 14 Mar 2014 10:56 AM
Last Updated : 14 Mar 2014 10:56 AM

கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுமா? தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பரவலாக தொழில்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியீட்டின்போது வட்டிக் குறைப்பு தொடர்பான அறிவிப்பை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிடுவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் வட்டி குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதாக இத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்தமாதம் வெளியாகும் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் இப்போதைய வட்டி விகிதமே தொடரும் என்று 'கேர்' தரச்சான்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து குறையும் என்று உறுதியான பிறகுதான் வட்டி குறைப்பு நடவடிக்கை மூலம் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுவது குறித்து ஆர்பிஐ பரிசீலிக்கும் என்று கேர் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இனிமேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடாது என்று கூற முடியாது என்று ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் இது 8.7 சதவீ தமாக இருந்தது. அதேசமயம் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண் ஜனவரி மாதத்தில் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களாக தொழில்துறை சரிவைச் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பிறகு கடனுக்கான வட்டி விகிதம் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. கடைசியாக கடந்த ஜனவரி மாதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அட்டவணை குறைய வேண்டும் என்பதில் ஆர்பிஐ தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. நுகர்வோர் குறியீட்டெண்ணை 2015-ம் ஆண்டில் 8 சதவீத அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளு. 2016-ல் இது 6 சதவீதமாகக் குறைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அதை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சில்லறை பணவீக்கம் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவுக்குக் குறைந்துள்ளது. 2015-ம் ஆண்டு ஜனவரியில் எட்ட வேண்டிய அளவை நோக்கி குறைந்து வருகிறது. இருப்பினும் சில உணவுப் பொருள்களின் விலை உயர்வு பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கலாம் என்று மற்றொரு தரச்சான்று நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் செப்டம்பர் காலாண்டு வரை எத்தகைய மாற்றமும் வட்டி விகிதத்தில் இருக்காது என்று கிரெடிட் சூயிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவிதத்தை உயர்த்தலாம் என்றும், 2016 மார்ச் மாதத்தில் 6 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கையை ஆர்பிஐ எடுக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x