Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

லாபம் தரும் நீண்ட கால முதலீடுகள்!

இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருந்த பொழுதும், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒரு திடமான வளர்ச்சியைத் தருவதற்கு வேறு எந்த நாடாலும் முடியாது. ஆகவே இந்தியாவுடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லது எதிர்காலத்தில் திரும்பிவந்து செட்டிலாக விரும்புபவர்கள் இந்தியாவில் தங்கள் முதலீடுகளைத் தாராளமாக வைத்துக்கொள்ளலாம். கரன்ஸி ஒரு ரிஸ்க் என்றாலும் தங்களின் ஒரு பகுதி முதலீட்டை இந்தியாவில் வைத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை. நீண்ட கால கண்ணோட்டத்தில் அந்த பணவீக்கத்தையும் தாண்டி நல்ல வருமானத்தை தரவல்லது இந்தியப் பொருளாதாரம். இதற்கு கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா தந்துள்ள வருமானம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஒரு சிறிய உதாரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் நல்ல பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டத்தில் ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 50 லட்சங்களுக்கு மேலாக இருக்கிறது. இந்த முழுப்பணத்திற்கும் ஒரு பைசா கூட இந்தியாவில் வருமான வரி கட்டத் தேவையில்லை. இந்த அளவு வருமானத்தை கொடுத்துள்ள நாடுகள் வெகு சிலவே.

என்.ஆர்.ஐ – களுக்கு உள்ள ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் நாம் இனி விரிவாகக் காண்போம். முதலீட்டு வாய்ப்புகளுக்கு செல்லும் முன், என்.ஆர்.ஐ-களுக்கு உண்டான காப்பீடு பற்றிய சில அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்வோம். ஏனென்றால், காப்பீடு ஒருவரின் செல்வத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் குடும்பம் இந்தியாவில் வசிக்கும் பொழுது, குடும்பத்தினருக்கு இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம்.

45 வயதிற்கு கீழ் இருக்கும் பொழுது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு வலியுறுத்துவது இல்லை. ஆனால் 45 வயதிற்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே நிறுவனங்கள் பாலிசியை வழங்குகின்றன. வெளிநாட்டிலேயே செட்டிலாகி, அங்கே வாழ்பவர்கள் இந்தியாவில் இப்பாலிசிகளை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. தாங்கள் வாழும் நாட்டிலேயே தேவையான அளவிற்கு ஹெல்த் இன்சூரன்ஸை எடுத்துக்கொள்ளலாம்.

மற்றும் ஒரு முக்கியமான காப்பீடு ஆயுள் காப்பீடு ஆகும். இன்று இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் என்று கூறப்படும் ஆயுள் காப்பீடு மிகக்குறைந்த விலையில் பலருக்கும் கிடைக்கிறது. இந்தி்ய குடியுரிமையுடன் வெளிநாட்டில் வாழ்பவர்கள் (சில ஹை ரிஸ்க் நாடுகளை தவிர்த்து) இந்தியாவில் தாளாரமாக

ஆயூள் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 25 வயது கொண்ட ஆண் ஒருவருக்கு ரூபாய் 1 கோடி ஆயூள் காப்பிட்டிற்கு வருடாந்திர பிரீமியம் தரமான நிறுவனங்களிடமிருந்து வரிகள் உட்பட, சுமாராக ரூபாய்.10000 ஆகும். அசம்பாவிதம் வெளிநாட்டில் நடந்தாலும் இந்த காப்பீடு கைகொடுக்கும். இந்தியாவில் முடிவாக செட்டிலாக விரும்புபவர்கள், தங்களது இளம் வயதிலேயே இப்பாலிசிகளை தங்கள் குடும்ப நலனிற்காக

எடுத்துக் கொள்வது அவசியம். இப்பாலிசிகள் எடுக்கும் பொழுது இந்தியாவில் முழு மருத்துவப் பரிசோதனையை செய்து கொள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கும் பொழுது பிரிமியம் கூட்டப்படுகிறது. அதே போல் சுரங்கம் போன்ற ஹை ரிஸ்க் வேலைச் சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும் பிரீமியம் அதிகமாக்கப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வது அவசியம். இந்த பாலிசியுடன் வேறு பல ரைடர்களையும் வாடிக்கையாளர்கள் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

இனி வரும் வாரத்தில் என்.ஆர்.ஐ-களை எளிதில் கவரக் கூடிய முதலீடுகளைப் பற்றிப் பார்ப்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x