Last Updated : 25 Nov, 2013 12:00 AM

 

Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

பொதுவான முதலீட்டு தவறுகள்

கடந்த வாரம் எதில் முதலீடு செய்யலாம் என்று பார்த்தோம். இந்த வாரம் பொதுவான முதலீட்டு தவறுகள் என்னவென்று பார்த்தால் அதை நாம் சரி செய்து கொள்ளலாம்.

எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் நாம் கேட்க கூடிய சில கேள்விகள்

1. எவ்வளவு ரிடர்ன் கிடைக்கும், அது சந்தையின் எற்ற இறக்கத்திற்குட்பட்டதா, எவ்வளவு காலம் அதில் இருக்கவேண்டும்?

2. நடுவில் எடுக்க முற்பட்டால் எவ்வளவு % வெளியேறும் தொகை, இந்த முதலீடு மாதா மாதமா அல்லது வருடா வருடம் கட்ட வேண்டுமா, அல்லது ஒரே ஒரு தடவை தானா?

3. பணத்தை பொறுத்தவரை “பர்ச்சேசிங் பவர்” என்னவென்று பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஒருவர் தான் முதலீடு செய்த தொகை 1 லட்சம் ரூபாய், ஐந்து வருடம் கழித்து திரும்ப கிடைத்தாலும் அவர்கள் வருத்தப்படுவதில்லை. ஆனால் அதனுடைய மதிப்பு வெறும் 50,000 தான் 8% பணவீக்கம் என எடுத்துக்கொண்டால்.

லைப் இன்சூரன்ஸ்

முன்பே சொன்னது போல இன்சூரன்ஸ் ஒரு போதும் இன்வெஸ்ட்மென்ட் ஆக முடியாது. இது தெரியாமல் நிறைய பேர் பாலிசி எடுத்திருக்கிறார்கள், மேலும் மேலும் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்சூரன்சில் வெளியேறும் தொகை மிக மிக அதிகம். இதனால் நிறைய பேர் தொடர்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை போட்ட பணத்தை விட குறைவாக எடுக்கக் கூடாது. கடைசியாக அவர்களுக்கு கிடைக்கும் தொகைக்கான வட்டி 6 முதல் 7% வரை தான். இதை தவிர்த்து டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் அவரது ரிஸ்கை கவர் செய்து கொள்ளமுடியும்.

இன்றைய பண இழப்பை ஒத்துக்கொள்ளாவிட்டால் அவர்கள் 20 வருடங்களுக்கு தொடரும்பொழுது பெரிய இழப்பையே சந்திக்க நேரிடும். குழந்தை பேரில், பெண்களின் பேரில், ரிடையர்மென்ட் என்று இன்சூரன்ஸ் பிளான் தேர்ந்தெடுப்பதை தவிர்க்கவும்.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யும் போது செக்டார் ஃபண்டை தவிர்க்கவும். அது அதிக ரிஸ்க், அதிக ரிடர்ன். மேலும் சரியான நேரத்தில் நுழைந்து, சரியான நேரத்தில் வெளியேற வேண்டும். இன்றைய அவசர உலகில் நிறைய பேரால் நேரத்தை அதற்காக ஒதுக்க முடிவதில்லை.

மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலோர் இந்த வகையான முதலீடு செய்தவர்களே! இதை போன்று தெள்ளத் தெளிந்த முதலீடு எதுவும் கிடையாது. இதன் பெரிய சவாலே முதலீட்டார் எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் மற்றும் வெளியே செல்லலாம் என்பதே. வேறு முதலீட்டில் அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது, இந்த முதலீடு தான் எல்லோருடைய கண்ணையும் உறுத்தும். நீண்ட காலம் தொடராததால் நிறைய பேரால் பணம் சேர்க்க முடியவில்லை. பொதுவாக 3 வருடத்திற்கு மேல் யாரும் தொடருவதில்லை என்பது வருத்தமான விஷயம், இதிலும் அதிக வெளியேறும் தொகை இருந்தால் நிறைய பேர் கண்டிப்பாக தொடர்ந்திருப்பார்கள்.

தங்கம்

எல்லோராலும் ஒத்துக்கொள்ள கூடிய இன்வெஸ்ட்மென்ட் தங்கமே. தங்கம் கடந்த ஐந்து வருடங்களாக நல்ல ரிடர்ன் கொடுத்ததால் எல்லோரும் அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அனைவரும் சொல்லக்கூடிய பொதுவான காரணம் வேண்டும்பொழுது விற்கலாம். ஆனால் ஒருவரும் விற்பதில்லை! மேலும் தங்கத்திற்கு அதிகப்படியான ரிஸ்க் உள்ளது, அது சர்வதேச உலோகம் என்பதால் கரன்சி ரிஸ்க் அதிகம். கடந்த 30 ஆண்டுகளாக நம்முடைய கரன்சியான ரூபாய், 8 மடங்கு வீழ்ந்துள்ளது. அடுத்த 30 வருடங்களில் 64 ரூபாய் 512 ஆக முடியாது. எனவே உங்களுக்கு பெண் குழந்தை திருமணத்திற்கு இருந்தால் கொஞ்சம் தங்கத்தில் சேமிக்கலாம். தங்கத்தை ஒரு பெரிய முதலீடாக கருதி பணத்தை போடுவதைத் தவிர்க்கவும்.

தங்கத்தால் நமக்கு மாதா மாதம் எந்த வருமானமும் கிடையாது அதை விற்கும்பொழுது நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்து காணப்பட்டாலே ஒருவருக்கு பயன். ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேரும்போழுது அதனுடைய கரன்சி மதிப்பு அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்பு மிக குறைவு.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் கடந்த 10 வருடத்தில் தாறு மாறாக ஏறி கிடக்கிறது. இன்று பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆனதால் நம்முடைய அன்றாட தேவைகளான அரிசி, பருப்பு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

“விலை நிலங்களெல்லாம் விற்று ரியல் எஸ்டேட்டாக மாற்றினால் வீட்டை இடித்து விவசாயம் செய்பவர் யார்”

இன்று ரியல் எஸ்டேட்டை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று காலி மனை மற்றொன்று அடுக்கு மாடி குடியிருப்புகள். காலி மனையினால் நமக்கு மாத வருமானம் கிடைக்காது, அதை விற்கும்பொழுது தான் நமக்கு பயன் அதுவும் கண்காணாத இடத்தில் தான் வாங்க முடிவதால் அதை பராமரிப்பதும் மிகவும் கடினமான ஒன்று.

அடுத்ததாக அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகை 2% முதல் 2.5% வரைதான் கிடைக்கிறது, இது மிகவும் குறைவு. எல்லோருக்கும் ஒரே நம்பிக்கை 20 வருடத்தில் அது சொந்தமாகும் என்பதே. வீடு என்பது ஒரு உணர்வு பெருக்கான விஷயம், அதனால் ஒன்று வாங்குவதில் தவறில்லை. ஆனால் இன்று பெண்ணுக்கு ஒன்று, பையனுக்கு ஒன்று என்று மீண்டும் மீண்டும் எல்லா பணத்தையும் அதிலே போடுவதால் அவர்களுக்கு அன்றாட தேவைக்கு பணம் பத்துவதில்லை. இது புலி வாலை பிடித்த கதை. அதிகமாக EMI கட்ட வேண்டி உள்ளதால் அவர்களால் தன்னுடைய வேலையே விட முடிவதில்லை. இதனால் மன அழுத்தம், மற்றும் உடல் வலிமையை இழக்கிறார்கள். பின்பு அதை சரி செய்வதற்கு மருத்துவரிடம் சம்பாதித்ததை கொடுக்கிறார்கள்.

இதற்கு ஆங்கிலத்தில் RAT RACE என சொல்வார்கள், இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் ஜெயித்தாலும் கடைசியில் நீங்கள் ஒரு RAT தான், மனிதர் கிடையாது!

பல விஷயங்களுக்கு நாம் நம்முடைய முன்னோர்களை பின்பற்றுகிறோம். ஒருவர் கூட அந்த காலத்தில் இப்படி இடம் இடம் என்று அலையவில்லை. அவர்கள் தனக்கு தேவைக்கு மட்டும் வேலை செய்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதனால் இவ்வளவு வீடு வாங்கியும் வயதானவுடன் பெரும்பாலோர் வயதானவருக்கான ஹோமில் தான் வசிக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமான விஷயம், முன்பு உறவுகளுக்கும் மனிதர்களுக்கும் மதிப்பு கொடுத்ததால் எல்லோரும் கஷ்டமோ நஷ்டமோ ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

இன்று எல்லோருக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் மற்றவருக்காக வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு வைப்பு நிதி திட்டங்கள் ஒருபோதும் உதவாது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் நல்ல ரிடர்ன் வரும். இங்கு பெரும்பாலும் ரிஸ்க் என்பது பொறுமையாக காத்திருத்தலே. பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது சந்தையை சார்ந்த நிதி திட்டங்களுக்கு மிகவும் பொருந்தும். இதில் சம்பாதித்தவர்கள் இதை தான் பின்பற்றி இருக்கிறார்கள்!

நம்முடைய நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கினால் இத்தகைய தவறுகளை தவிர்த்து சிறந்த முறையில் முதலீடு செய்து நிறைய பணம் பண்ணலாம்.

பி.பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x