ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் நேரடி வரி வசூல் 15% உயர்வு

ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் நேரடி வரி வசூல் 15% உயர்வு
Updated on
1 min read

நேரடி வரி வசூல் ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதங்களில் ரூ.1.89 லட்சம் கோடி நேரடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. நேரடி வரி வசூலில் தனிநபர் வருமான வரி முன்னிலையில் உள்ளது குறிப் பிடத்தக்கது.

நேரடி வரியில் நிறுவனங்கள் வருமான வரி மற்றும் தனிநபர்கள் வருமான வரியும் அடங்கும். பட்ஜெட் எதிர்பார்ப்புபடி நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வசூல் இலக்கில் முதல் ஐந்து மாதங்களில், ஆகஸ்ட் மாதம் வரை 22.30 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

2016 ஆகஸ்ட் மாதம் வரையில் நேரடி வருமான வரி ரூ.1.89 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தோடு ஒப்பிடும்போது 15.03 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.

நிறுவனங்களின் வருமான வரி மொத்த வசூலின் வளர்ச்சி 11.55 சதவீதமாக உள்ளது. தனிநபர் வருமான வரி வளர்ச்சி 24.06 சதவீதமாக உள்ளது.

ஏப்ரல் -ஆகஸ்ட் மாதங்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட ரூ.77,080 கோடி வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 22.18 சதவீதம் அதிகமாகும்.

மறைமுக வரி 27.5% உயர்வு

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையி லான காலத்தில் மறைமுக வரி வசூல் 27.5 சதவீதம் உயர்ந்து 3.36 லட்சம் கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் இலக்கில் 43.2 சதவீதம் இதுவரை (ஆகஸ்ட் மாதம் வரை) வசூல் ஆகியுள்ளது.

உற்பத்தி வரி கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1.03 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.1.53 லட்சம் கோடியாக இருக்கிறது.

சேவை வரி வசூல் 23.2 சதவீதம் உயர்ந்து ரூ.92,696 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.752,19 கோடியாக இருந்தது. சுங்க வரி வசூல் 5.7 சதவீதம் உயர்ந்து ரூ.90,448 கோடியாக இருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் ரூ.8.47 லட்சம் கோடி நேரடி வருமான வரியும், 7.79 லட்சம் கோடி மறைமுக வரி வசூல் செய்யவும் மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in