Last Updated : 12 Feb, 2014 11:38 AM

 

Published : 12 Feb 2014 11:38 AM
Last Updated : 12 Feb 2014 11:38 AM

தமிழ் நாட்டில் பின்லாந்த் நிறுவனம் முதலீடு?

தமிழகத்தில் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தித் திட்டங்களில் பின்லாந்து நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. புதிதாக தொழில் தொடங்குவது அல்லது ஏற்கெனவே இங்கு செயல்படும் சூரிய மின்னுற்பத்தி ஆலைகளைக் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பின்லாந்தைச் சேர்ந்த பார்டம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் விரைவிலேயே தடம் பதிக்க உள்ளோம் என்று பார்டம் நிறுவனத்தின் துணைத் தலைவர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.

இந்நிறுவனம் ஐரோப்பாவில் நீர் மின் நிலையம் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு இந்நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை வாங்கியதன் மூலம் இந்தியச் சந்தையில் நுழைந்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்ளுக்கு கிடைக்கும் வரவேற்பையும், சூரிய மின்னுற்பத்தி தொழிலுக்கு இங்குள்ள வரவேற்பையும் புரிந்து கொள்ளவே ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த 5 மெகாவாட் மின்நிலையத்தை வாங்கினோம் என்று நிறுவன மேலாண் இயக்குநர் மாட்டி கார்நகாரி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே செயல்படும் ஆலைகளை வாங்குவது அல்லது புதிதாக தொடங்கும் உத்தேசமும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளாக அவர் கூறினார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்து வந்தாலும், தங்களது பிரதான இலக்கு தமிழகம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு தமிழ் நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்ட ஒரு டென்டர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் முதலாளிகள் தாங்கள் பெற்ற ஆலை நிறுவும் உரிமைகளை விற்க தயாராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய உரிமத்தை இந்நிறுவனம் வாங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x