

இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அமலாவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முக்கிய பிரச்சினையாக இருந்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றுக்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் இறுதி ஒப்புதல் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கிடைக்கும்.
டெல்லியில் 11-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ள வேண்டிய ஜிஎஸ்டி மசோதா குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டது. இருப்பினும் மாநில ஜிஎஸ்டி குறித்து விவாதம் நடைபெறவில்லை என தெரிகிறது.
``ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். இப்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது,’’ என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது ஜேட்லி குறிப்பிட்டார்.
``ஜிஎஸ்டி மசோதாவில் மொத்தம் 26 வகையான திருத்தங்களை மாநில அரசுகள் சுட்டிக் காட்டின.அவற்றை திருத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுதான் கூட்டாட்சி அமைப்பின் மிகப் பெரிய பலமாகும். சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி குறித்து அடுத்த கட்ட விவாதம் நடைபெறும். அடுத்த கூட்டம் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்,’’ என்று மேற்கு வங்கத்தின் நிதி அமைச்சர் அமித் மித்ரா குறிப்பிட்டார். சாலையோர உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரென்டுகளுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுங்கள் ஒப்புக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
சாலையோர உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரென்டுகள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் வரும். இதன்படி சிறிய வர்த்தகர்கள் 5 சதவீத வரி (இதை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பகிர்ந்துகொள்ளும்) விதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று மித்ரா கூறினார்.
மாநிலங்களிடையிலான சரக்கு போக்குவரத்தில் வரி விதிக்க ஐஜிஎஸ்டி உதவும். இதனால் மாநில வரி விதிப்புத்துறை மற்றும் மத்திய வரி விதிப்பு அதிகாரிகளிடையே அதிகார போட்டி ஏற்படும். இதைத் தவிர்க்க உரிய சட்டம் தேவை என வலியுறுத்தப்பட்டது என்று மித்ரா மேலும் கூறினார்.
சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு மாநில அரசுகள் ஒப்புக் கொண்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.
ரியல் எஸ்டேட் துறையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும். இத்துறையில்தான் அதிக அளவிலான கறுப்புப் பணம் புழங்குவது அனைவருக்கும் தெரியும். இத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிசோடியா கூறினார்.
சட்ட வரைவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இது சட்ட அமைச்சகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிதி அமைச்சர் ஹசீப் டிராபு கூறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் நான்கு நிலை அதாவதுத 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் உச்சபட்ச அளவு 40 சதவீதம் என சனிக்கிழமை ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஜேட்லி கூறினார். சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்சி மற்றும் யுடி-ஜிஎஸ்டி சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வைக்கப்பட உள்ளது. இக்கூட்டத் தொடர் இம்மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது என்று ஜேட்லி கூறினார்.