Published : 06 Sep 2016 08:05 PM
Last Updated : 06 Sep 2016 08:05 PM
ரிலையன்ஸ் ஜியோ வருகையால் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சவாலான காலகட்டத்தில் உள்ளன. இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
போட்டி நிறைந்த சந்தையில் நிலைப்பதற்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றப்பட வேண்டும். இதில் சந்தேகம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு இந்த போட்டி நல்லது. இதன் மூலம் அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைக்கும் என்றார். குரல் அழைப்புகளை இலவசமாக்கும் சூழல் இருக்கிறதா என்று கேட்டதற்கு, தற்போது அது குறித்து பரிசீலித்து வருகிறோம். இரண்டு மூன்று மாதங்கள் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே முடிவெடுக்க முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் நெட்வொர்க் இருக்கிறது. குரல் அழைப்புகள் இலவசமாக கொடுக்க முடியும். ஆனால் மாதந்திர கட்டணம் வசூலிக்க வேண்டி இருக்கும். இது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
இரவு 9 மணி முதல் காலை ஏழு மணி வரை இந்தியா முழுவதும் இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி பிஎஸ்என்எல்-ல் இருக்கிறது. சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மொபைல் மற்றும் லேண்ட் லைன் இணைப்புகளுக்கும் இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT