Last Updated : 21 Sep, 2013 05:58 PM

 

Published : 21 Sep 2013 05:58 PM
Last Updated : 21 Sep 2013 05:58 PM

ஏன் வேண்டும் சொந்த வீடு?

கல்யாணத்தைக்கூட சிரமமில்லாமல் செய்து முடித்துவிடலாம் போல, வீடு கட்டுவதுதான் மலைப்பாக இருக்கிறது. அதுவும் நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், வீடு கட்டுவது நடுத்தர குடும்பத்தினருக்கு குதிரைக் கொம்பாகி வருகிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதால், வீடு வாங்குவது பலருக்கும் கனவாகவே இருக்கிறது.

சமூக அந்தஸ்தின் குறியீடு

என்னதான் வீட்டு விலை உச்சத்தில் இருந்தாலும், சொந்த வீட்டு கனவு நடுத்தர மக்களிடம் இல்லாமல் இல்லை. பல்வேறு காரணங்களுக்காக வீடு வாங்கவோ கட்டவோ வேண்டும் என்று அடிமனதில் ஆசை இருக்கவே செய்கிறது.

வீடு என்பது இன்று சமூக அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்களை உறவினர்கள், நண்பர்கள்கூட குறைத்து மதிப்பிடுகிறார்கள். இந்த வீட்டுப் பிரச்சினை திருமணம் வரையிலும் தன் எல்லையை நீட்டித்துவிடுகிறது. மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கிறதா என்ற கேள்வியுடன்தான் பெண் பார்க்கும் படலமே துவங்குகிறது. சொந்த வீடு இருந்தால், பெண் கொடுப்பதில்கூட முன்னுரிமை கிடைக்கிறது. எனவே சமூக அந்தஸ்துக்காகவே வீடு வாங்க ஆர்வம் காட்டும் நடுத்தர குடும்பத்தினரும் உண்டு.

"சொந்த வீடு இருந்தால், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தனி மரியாதை கிடைக்கிறது" என்கிறார் தாம்பரத்தைச் சேர்ந்த ஜீவிதா சுரேஷ்குமார். "எனக்கும், எனது கணவருக்கும் ஊரில் சொந்த வீடுகள் இருக்கின்றன. ஆனால், எங்களைப் பார்க்க வரும் உறவினர்களும், நண்பர்களும் இங்கே சொந்த வீடு வாங்கவில்லையா என்று கேட்பதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். இது எனக்கு உறுத்தலாக இருந்தது. இதன் பிறகே வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்புதான் வங்கியில் கடன் வாங்கி தாம்பரத்தில் வீடு வாங்கினோம்" என்கிறார் ஜீவிதா சுரேஷ்குமார்.

வீடு மாறுவதில் பிரச்னைகள்

சொந்த வீட்டுக்காரருக்கு ஒரு வீடு; வாடகை வீட்டுக்காரருக்கு ஆயிரம் வீடு என்று வாடகை வீட்டுக்காரர்கள் பெருமை பேசுவதுண்டு. ஆனால், ஓவ்வொரு முறையும் வீடு மாறும் போது, ரேஷன் கார்டு விலாசம் மாற்றுவது முதல் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது வரை பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதற்காக தனியாக மெனக்கெட வேண்டும். அடிக்கடி வீடு மாறும்போது தேவைப்படும் உழைப்பு, செலவு, பொருட்களின் தேய்மானங்கள்கூட சொந்த வீடு வாங்க பலரைத் தூண்டுகிறது.

உயரும் வீட்டு வாடகை

சென்னை போன்ற பெருநகரங்களில், வாடகை வீட்டில் குடியிருப்பதற்காகச் செய்யப்படும் செலவைவிட சொந்த வீடு வாங்குவது மேல் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தால்தான் ஓரளவுக்கு வசதியான வீடு கிடைக்கிறது. மின்சார கட்டணமும் வீட்டுக்கு வீடு வேறுபடுகிறது. ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும் வீட்டுக்காரர்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் தண்ணீருக்கு தனிக் கட்டணம், வீட்டு பராமரிப்புக்கு தனிக்கட்டணம் என வாடகைக்குக் குடியிருப்பவர்கள் செலவிடும் தொகை ஏராளம். இதற்கு ஆகும் செலவை வீட்டுக் கடனுக்குச் செலுத்தி விடலாம் என்று நினைக்கும் வாடகைதாரர்கள், சொந்த வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.

சிறந்த முதலீடு

நகரங்கள் விரிவடைந்திருப்பதுகூட வீடு வாங்கும் ஆசையின் மற்றொரு விளைவே. இருக்கும் விலைவாசியில் நகரின் மையப்பகுதியில் வீடு வாங்குவது நடுத்தர குடும்பத்தினருக்கு கனவுதான். எனவே புறநகர்ப் பகுதியிலாவது வீடு வாங்கி தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கின்றனர்.

மண்ணில் போட்ட காசு வீணாகாது என்பது இன்றையச் சூழலில் நூற்றுக்கு நூறு உண்மை. வீடு, நிலம் வாங்குவது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் 25 ஆயிரம் ரூபாயில் வாங்கப்பட்ட ஒரு மனை இன்று 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இதனால், வீடு, நிலம் வாங்குவது சிறந்த முதலீடாக மாறிவிட்டது.

எப்போது வீடு வாங்குவது?

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல, வீடு வாங்குவதற்கான சக்தி இருக்கும் போதே, குறிப்பாக நல்ல வேலையில் வருவாய் ஈட்டும் போதே, அதை வாங்குவது புத்திசாலிதனம். கட்டுமானப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தச் சூழலில், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வீடு கட்டுவது நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமமாக இருக்கலாம். எனவே இப்போதே வீடு வாங்குவது சாலச்சிறந்தது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.

"10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. 10 ஆண்டுகள் கழித்தும் விலை உயர்வு இப்படித்தான் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் மக்களின் வாங்கும் திறனும், வாழ்க்கைத் திறனும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், வீடு வாங்க அதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. இப்போது வீடு வாங்குவதே புத்திசாலிதனம். இப்போது முதலீடு செய்து வீடு வாங்கினால், அதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயரும் என்பதை மறந்து விடக்கூடாது" என்கிறார் அக்ஷயா பிரைவேட் லிமிடெட் தலைவர் சிட்டி பாபு.

மனித வாழ்வில் வீடு என்பது அடிப்படைத் தேவை. அந்த அடிப்படைத் தேவை சொந்தமாக இருந்தால், நம் வாழ்வு தன்னிறைவுப் பெற்றதாக இருக்கும்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x