Last Updated : 16 Apr, 2016 03:20 PM

 

Published : 16 Apr 2016 03:20 PM
Last Updated : 16 Apr 2016 03:20 PM

பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் உடையவரே மன்னன்: இந்திய பொருளாதாரம் குறித்து ரகுராம் ராஜன் ஒப்பீடு

சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்திற்காக வாஷிங்டன் சென்றுள்ள மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரம் குறித்துக் கூறும்போது, “பார்வையற்றோர் நாட்டுக்கு ஒரு கண் உள்ளவர் ராஜா” என்று ஒப்புமை ரீதியாக பதில் அளித்தார்.

அதாவது மற்ற நாடுகளின் பொருளாதார நிலவரங்கள் தடுமாற்றத்தில் இருக்கும் போது இந்தியப் பொருளாதாரம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பதையே ரகுராம் ராஜன் இந்த ஒப்பீடு மூலம் அர்த்தப்படுத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையமான ஐ.எம்.எஃப். ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் இந்தியப் பொருளாதாரம் ஒரு பிரகாசமான பகுதி என்று கூறப்படுவதை அடுத்து ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியுள்ளார்.

வால்ஸ்ட்ரீட் டிஜிட்டல் நெட்வொர்க் அங்கமான டவ்ஜோன்ஸ் அண்ட் கோ-வின் மார்கெட் வாட்ச் என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் ரகுராம் ராஜன் கூறியதாவது:

“இன்னும் திருப்தி அளிக்கக் கூடிய இடத்துக்கு நாம் செல்ல வேண்டுமென்று கருதுகிறேன். ‘பார்வையற்றோர் நாட்டிற்கு ஒரு கண் உள்ளவர் ராஜா’ என்ற மூதுரை நம்மிடையே புழக்கத்தில் உள்ளது. நாம் சிறிது அத்தகைய வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.

நமது நடுத்தர வளர்ச்சி ஆற்றலை சாதிக்கக் கூடிய நிலைக்கு நிலைமைகள் சாதகமாக திரும்பியுள்ளன என்று நாங்கள் உணர்கிறோம். ஏனெனில் தற்போது பொருளாதார வளர்ச்சிக்கான நிலையான சூழலமைவுகள் தகைந்துள்ளன.

முதலீடுகள் வலுவாக அதிகரித்து வருகின்றன. பெரும்பொருளாதா உறுதித்தன்மை நம் பொருளாதாரத்தில் நல்ல அளவுக்கு ஏற்பட்டுள்ளது. இதைக் கூறும் அதேவேளையில் உலகப் பொருளாதார அதிர்ச்சியில் பாதிக்கப்படாத பாதுகாப்பை எய்திவிட்டோம் என்று கூறவியலாது, ஆனால் பெரும்பான்மையான அதிர்ச்சிகளுக்கு நம் பொருளாதாரம் பாதுகாப்பாகவே உள்ளது.

நிறைய பொருளாதார நல்ல விஷயங்கள் நடைபெற்றுள்ளன. இருந்தாலும் இன்னும் சில விஷயங்களும் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. நடப்புக் கணக்கு, நிதிப்பற்றாக்குறை, பணவீக்க விகிதம் குறைந்தது ஆகியவற்றால் வட்டி விகிதம் குறைக்கப்பட முடிந்தது போன்ற சில நல்ல அம்சங்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் அமைப்புசார் சீர்த்திருத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புதிய திவால் சட்டத்தை கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவும் உள்ளது, ஆனால் உற்சாகமான பல பொருளாதார நல்ல விஷயங்கள் ஏற்கெனவே நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இரு வங்கிக் கணக்குகளுக்கிடையே மொபைல் டு மொபைல் பரிமாற்றங்கள் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுவான ஒரு மேடை. இதில் அனைவரும் பங்கேற்கலாம். இதில், உதாரணமாகக் கூற வேண்டுமென்றால் ஆப்பிள் பே, ஆண்ட்ராய்ட் பே என்று ஒற்றை நிறுவன உரிமைதாரர்கள் இல்லை. இது உலகிலேயே முதல் முறையென்று கருதுகிறேன். எனவே தொழில்நுட்ப மேம்பாடுகள் நிறைய பிரிவு மக்களுக்கு நன்மை விளைவித்துள்ளது.

சீனாவை ஒப்பிடும் போது இந்தியா 10 ஆண்டுகள் பின்னால் உள்ளது. சரியான பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் சீனாவை எட்டிப் பிடிக்க முடியும். அவர்கள் தற்போது இருக்கும் நிலைமைக்கு வருவதற்கு மேற்கொண்ட நல்ல கொள்கைகள் அசாதாரணமானவை. ஆகவே அவர்களை எட்டிப்பிடிக்க நாமும் நல்ல கொள்கைகளை வகுப்பதோடு, அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.

இப்போது நம்மிடம் நமக்கேயுரிய பலங்கள் உள்ளன. இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பாற்றல் உள்ளது. நாம் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிக் கூறும்போது மற்றவர்கள் சென்ற பாதையிலேயே நாமும் செல்லக் கூடாது, நமக்கான பாதையை வகுத்தெடுப்பதற்கான போதிய சூழ்நிலைமைகள் உள்ளன.

எனவே, கடுமையாக உழைப்பதும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், தேவைப்படும் மனித மூலதனம் ஆகியவற்றை உருவாக்குவதும் நாம் வெற்றி பெற உதவும். நல்ல ஒழுங்குமுறை சூழலை, அதாவது எளிமையான ஆனால் திறமையான ஒழுங்குமுறைச் சூழலை கட்டமைப்பதும், நிதிகளை அணுகுவதற்கு எளிமையாக்குவதும் அவசியம்.

பருவ மழை என்பது வேளாண்மையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய 50% மக்கள் தொகைக்கு முக்கியமானதாகும். இது உணவு விலைகளில் மிதமான தாக்கம் செலுத்தும், ஆனால் விளைவுகள் எப்படியிருந்தாலும் உணவு மேலாண்மையை திறம்படச் செய்தால் அதனை சமாளிக்க முடியும். ஆனால் பருவமழை நன்றாக அமைந்து விட்டால் உணவுப்பொருள் விலையைக் குறைக்க திறமையான உணவு மேலாண்மை கூட தேவையில்லை. எனவே நல்ல பருவ மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். வானிலை ஆய்வு மையம் இது குறித்து நம்பிக்கையான தகவல்களையே அளித்துள்ளது.

இவ்வாறு கூறினார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x