Published : 04 Feb 2016 10:45 AM
Last Updated : 04 Feb 2016 10:45 AM
இந்தியா வளர்ச்சி அடைவதற்கு மாநிலங்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை அவசிய மானது என பெங்களூருவில் நடை பெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியுள்ளார்.
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நேற்று காலை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த மாநாட்டில் அருண் ஜேட்லி பேசியதாவது:
சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கர்நாடகாவுக்கு வருமானமாக வரும் ஒவ்வொரு ரூபாயும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது இந்திய பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்திய பொருளாதாரத்தின் நிலைத் தன்மைக்கு மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்திய கூட்டாட்சியில் மாநிலங்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை நிலவுகிறது. ஒரு மாநிலம் மற்ற மாநிலத்தை விட அதிக வளர்ச்சியை அடைய வேண்டும் முனைப்பு காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒருங்கிணைந்த இந்தியா வளர்ச்சி அடைவதற்கு, மாநிலங்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை அவசியமானது. அப்போதுதான் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து, வறுமை ஒழியும். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் நிலையிலும் தனியார் துறை முதலீடுகளை அதிகரிப்பது, கிராமப் புறங்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றில் அதிக சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
இந்த மாநாட்டில் ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கொரியா, சுவீடன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT