Published : 10 Apr 2017 10:16 AM
Last Updated : 10 Apr 2017 10:16 AM
நேரடி வருமான வரி வசூலில் சதவீத அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் மும்பை பகுதிக்கு வருமான வரி வசூலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடையவில்லை என வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பகுதிக்கு ரூ.2.79 லட்சம் கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் மிகச் சிறிய அளவில் இந்த இலக்கினை எட்டவில்லை என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கூடுதலாக திருப்பி அளிக்கப்பட்ட தொகை கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கு மேல் இருந்ததே வருமான வரி இலக்கினை எட்ட முடியாததற்கு காரணம் என தெரிவித்தார். ஆனால் எவ்வளவு தொகை வசூலானது என்னும் தகவலை வெளியிட மறுத்துவிட்டார். கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் மும்பை பகுதியில் இருந்து 2.48 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நேரடி வசூல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கடந்த நிதி ஆண்டில் ரூ.8.47 லட்சம் கோடி நேரடி வரி வசூல் ஆகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டை விட இது 14.2 சதவீதம் உயர்வாகும். நேரடி வரி வசூலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு எட்டப்பட்டது.
பெங்களூருவில் நேரடி வரி வருமானம் முந்தைய நிதி ஆண்டைவிட 21 சதவீதம் உயர்ந்து ரூ.90,000 கோடியாக இருக்கிறது. அதேபோல புதுடெல்லியில் 5 சதவீதம் உயர்ந்து ரூ.1.1 லட்சம் கோடியாக இருக்கிறது. மாறாக சென்னையில் வருமான வரி வசூல் 18 சதவீதம் உயர்ந்து ரூ.60,000 கோடியாகவும் மற்றும் கொல்கத்தாவில் 15 சதவீதம் உயர்ந்து ரூ.36,500 கோடியாகவும் நேரடி வருமான வரி வசூல் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT