Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM

நிறுவன ஒதுக்கீடு மூலம் ரூ. 350 கோடி: ஐ.ஓ.பி. திட்டம்

தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு (க்யூஐபி) செய்வதன் மூலம் ரூ. 350 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டதாக மும்பை பங்குச் சந்தைக்கு வங்கி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு வங்கியில் உள்ள 65 சதவீத பங்கு அளவு எந்த வகையிலும் குறையாது. கடந்த நவம்பர் 11-ம் தேதி நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் ரூ. 2,100 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனம் தனது பங்குகளை முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ மாற்றத்தக்க கடன் பத்திரமாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அல்லது முழுவதும் பங்குகளாக மாற்றத்தக்க கடன் பத்திரங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டில் 20 பொதுத்துறை வங்கிகளின் மூலதன அளவை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ரூ. 14 ஆயிரம் கோடியை முதலீடு செய்தது.

நடப்பு நிதி ஆண்டில் மூலதன அளவை 8 சதவீத அளவுக்கு அதிகரித்துக் கொள்வதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டது.

இதற்கு முன் 2011-ம் நிதி ஆண்டில் ரூ. 20,117 கோடியும், 2012-ம் நிதி ஆண்டில் ரூ. 12 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x