

பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் தாள்கள் மூன்று வகைப்படும். ஒன்று, ஒரு ரூபாய் தாள் இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக கிழிந்து ஒன்றாக ஒட்டப்பட்டிருப்பது . எழுதியதால் கறை படிந்திருப்பது. மூன்று, கிழிந்ததாலோ, எரிந்ததாலோ ரூபாய் தாளின் ஒரு பகுதி காணாமல் போவது.
Reserve Bank of India (Note Refund) Rules, 2009 என்பதற்கு இணங்கி எல்லா வங்கிகளும் பொது மக்களிடம் (தங்களின் வாடிக்கையாளர்கள் இல்லை என்றாலும்) அவர்கள் கொடுக்கும் பழைய ரூபாய் தாளுக்கு இணையான புதிய அல்லது பயன்படுத்தக்கூடிய ரூபாய் தாளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை, ரூபாய் தாள் கிழிந்திருந்தால், அவற்றில் பெரிய பகுதி குறைந்தபட்சம் தாளின் ஐம்பது சதவிகிதம் இருக்க வேண்டும். அதாவது, கிழிக்கப்பட்ட ஒரு பகுதியாவது தாளின் ஐம்பது சதவிகிதத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பணத்தாளின் மதிப்புக்கு சமமான மற்றொரு ரூபாய் தாள் கொடுக்கப்படும்.
ஐம்பது முதல் ஆயிரம் ரூபாய் தாள்கள் கிழிந்திருந்தால் அதில் 65 சதவிகிதம் இருக்கும்பட்சத்தில் அதற்கு இணையான ரூபாய் தாள் கொடுக்கப்படும். அப்பகுதி 40 முதல் 65 சதவிகிதம் இருந்தால் அந்த ரூபாய் மதிப்பில் 50 சதவிகிதம் உள்ள ரூபாய் தாள் கொடுக்கப்படும்.
அழுக்கடைந்த ரூபாய் தாள்களின் எழுத்துகள் மறையாமலும், அவை நல்ல ரூபாய் தாள்கள் என உறுதி செய்யப்படும் பட்சத்தில், அந்த ரூபாய் தாளுக்கு இணையான அல்லது 50 சதவிகித பணம் கொடுக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள வரையறைக்கு மாறாக வேறு எப்படி இருந்தாலும் அந்த ரூபாய் தாள்களுக்கு இணையான மாற்று ரூபாய் தாள்கள் கொடுக்கப்படமாட்டாது.