Last Updated : 30 Dec, 2013 12:06 PM

 

Published : 30 Dec 2013 12:06 PM
Last Updated : 30 Dec 2013 12:06 PM

தங்கம் ஒரு சிறந்த முதலீடா?

இந்தியாவில் தங்கத்தை விரும்பாதவர்கள் ஒருவரும் இல்லை. பல ஆண்டுகளாக அதன் விலை உயர்ந்து கொண்டே வந்ததும், குறிப்பாக கடந்த 5 முதல் 7 ஆண்டுகளின் வளர்ச்சி, எல்லோருக்கும் அது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் என்ற நம்பிக்கை வந்ததற்கான காரணமாகும்.

நாம் தங்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆபரண தங்கம், அன்றாடம் அணிந்துகொள்வது, அணியாதபோது அதை லாக்கரில் வைப்பது. பெரும்பாலும் இந்த வகையான தங்கம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொடுப்பது என்பது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு அல்லது வழக்கம் என்றும் கூறலாம். மற்றொன்று தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதி வாங்குவது. இதை நகைக்கடைகளில் தங்கமாகவும், தங்க சீட்டிலும் வாங்குவது. மற்றொன்று காகித தங்கம்.

தங்கம் வாங்குவதற்குப் பொதுவான காரணம், நமக்கு வேண்டும்பொழுது அதை விற்று காசாக்கி கொள்ள முடியும் என்று ஒரு கூற்று. நடைமுறை வாழ்க்கையில் எந்த பெண்ணும் அதற்கு உடன்படுவதில்லை. பெரும்பாலும் அது ஒருவரிடத்தில் இருந்து மற்றவருக்கு (சந்ததி சந்ததியாக) ரிலே ரேஸ் போல சென்று கொண்டே இருக்கிறது.

தங்கத்தை பற்றிய உண்மை

நான் கூறப்போகும் தங்கத்தை பற்றிய உண்மையை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், ஆனால் இது மிகவும் உண்மையான ஒரு விஷயம். நாம் தங்கத்தை வாங்குவதற்கு அமெரிக்க டாலரை தான் உபயோகப்படுத்துகிறோம்.

உலக நாடுகளில் தங்கத்தை ட்ராய் அவுன்ஸில் அளவிடுகிறார்கள். ஒரு அவுன்ஸ் 31.1 கிராமுக்கு சமம். ஏறக்குறைய 4 பவுன் என்று நம்முடைய கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். 1980ம் ஆண்டு ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் 850 அமெரிக்க டாலர், அதே தங்கம் 2000ம் ஆண்டு 270 டாலருக்கு வந்து, மீண்டும் 2008ம் வருடம் 850 டாலரை எட்டுகிறது. 28 வருடம் உலக சந்தையில் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துகொண்டால் அது மைனசில் சென்றுவிடும். அதே சமயம் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாயிலிருந்து 48 ரூபாய் வரை வந்துவிட்டது. இதனால் இந்தியாவில் தங்கம் எப்போதும் உயர்ந்தே காணப்பட்டது.

கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் 1930 டாலராக இருந்தது, இப்போது 1200 டாலர், அதாவது ஏறக்குறைய 38% வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த கால கட்டத்தில் 46 ருபாய் இருந்த டாலரின் மதிப்பு இப்போது 62 ரூபாயாக மாறி உள்ளது. ஆதாவது 35% டாலர் அதிகரித்ததால் இங்கு பெரிதாக விலை குறையவில்லை.

உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், இங்கிருந்து ரூபாய் இன்னும் 5 வருடத்தில் எங்கு இருக்கும்? மேலும் உலகசந்தையில் ஏறி இருக்குமா இல்லை இறங்கி இருக்குமா? கண்டிப்பாக கரன்சி பெரிதாக ஏற வாய்ப்பில்லை. உலக சந்தையிலும் இறங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய என செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மற்றொரு தகவல் ஒரு நாடு முன்னேற்றம் அடையும்போது அந்த நாட்டின் கரன்சி அதிகரிக்குமே தவிர குறையாது.

இந்தியாவில் தான் நிறைய மக்கள் 25 முதல் 35 வயது வரை உள்ளார்கள் என்று ஒரு ஆய்வில் கூறுகிறார்கள். அதனால் நம் ரூபாயின் மதிப்பு கூடுவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இன்று நிறைய பேர் தங்கத்தை வங்கிகளில் வாங்குகிறார்கள், அது மிக மிக தவறான ஒரு செயல். முதலில் அந்த தங்கம் 24 காரட், மேலும் அதை மீண்டும் வங்கியில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஆபரண தங்கத்தைவிட அது 15% கூடுதல் விலை. நாம் வாங்கினால் நம் வீட்டின் வரவேற்பறையில் கூட வைக்க முடியாது. அதை நகைக்கடையில் கொடுத்து தான் பணமாகவோ அல்லது ஆபரணமாகவோ வாங்கி கொள்ளமுடியும். தங்கத்தை வைத்து நமக்கு யாரும் மாதா மாதம் பணம் தரப்போவதில்லை. அதை விற்கும்போது செய்கூலி, சேதாரம் போக நாம் வேறு நகையாக வாங்கமுடியும். பணம் வேண்டும் என்றால் தங்கத்தின் மதிப்பில் இன்று 4% எடுத்துக்கொண்டு அதுவும் காசோலையாக தான் பெரிய நகைக்கடைகளில் கொடுக்கிறார்கள்.

இன்றைய யுவதிகளுக்கு தங்கத்தில் அதிகம் நாட்டமில்லை, மேலும் அவர்களுக்கு அதை லாக்கரில் வைத்து எடுப்பதில் துளிக் கூட இஷ்டமில்லை. அதனால் அவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய டிசைனர் வகை ஆபரணங்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் இன்னும் நம்முடைய சமூகத்தில் திருமணம் என்றால் நகையைத் தவிர்க்க முடிவதில்லை. சிறந்த வழி என்னவென்றால், நாம் தினசரி அணியும் நகைகளை மட்டும் அணிந்து கொண்டு, குழந்தைகளின் திருமணத்திற்காக காகித தங்கமாக சேமித்தல் சிறந்தது. அதைவிட சிறந்தது, வேறு ஏதாவது ஒன்றில் இன்வெஸ்ட்மென்ட் செய்து அந்த பணத்தை திருமணத்தின் சமயம் தங்கமாக மாற்றிகொள்ளலாம்.

எந்த ஒரு முதலீட்டிலும் நேரடியாக பணத்தை வாங்கிகொண்டாலோ அல்லது அந்த முதலீடு ஒரு ஒழுங்கு முறை கட்டுபாட்டின் கீழ் வரவில்லை என்றால் அந்த மாதிரி முதலீடு மிகவும் ரிஸ்க்கான விஷயம். இன்று நிறைய கருப்பு பணம் இந்த முதலீட்டில் உள்ளது. மற்ற முதலீடுகள் என்றால் ஒருவர் எவ்வளவு வைத்துள்ளார் என்று எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த முதலீட்டில், அது மிக மிகக் கடினம் என்றே சொல்லலாம்.

முதலீடு என்பது வளரக்கூடியதாக இருக்க வேண்டும். அது அவ்வப்போது நமக்கு வட்டியோ அல்லது டிவிடென்டோ தரவேண்டும். அதை விற்கும்போது மட்டும் பணம் தந்தால் அது சிறந்த முதலீடாக இருக்க முடியாது. உலகின் மிக பெரிய பணக்காரரில் ஒருவரும் மிகச்சிறந்த முதலீட்டாளருமான வாரன் பப்பெட் என்பவர் தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதுவதில்லை. எந்த ஒரு கமாடிட்டியுமே ஒரு சிறந்த முதலீடு கிடையாது ஏனெனில் அதை ஒரு நம்பிக்கையின் பேரில் நாம் வாங்குகிறோம், நம் நம்பிக்கை பொய்த்துப்போக வாய்ப்புள்ளது. அதே பணத்தை ஒரு பிசினசில் முதலீடு செய்யும்பொழுது, அது பல மடங்கு வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

சாராம்சம்:

தங்கம் ஒருவருக்கு தேவை, மேலும் அது சமூகத்தில் அந்தஸ்து கொடுக்கிறது, நம்முடைய உறவினர்கள் நம்மை மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் வாங்கலாம். ஏனெனில், அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து அது ஒரு முதலீடு, நாளை நல்ல ரிடர்ன் கொடுக்கும் அல்லது கடந்த பத்து ஆண்டுகளை போல விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நினைப்பில் வாங்குவது மிகவும் தவறு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x