Published : 19 Feb 2014 09:48 AM
Last Updated : 19 Feb 2014 09:48 AM

வங்கிகளின் மொத்த வாராக்கடன் 35.2 சதவீதம் அதிகரிப்பு: என்.பி.ஏ. சோர்ஸ் டாட் காம் தகவல்

வங்கிகளின் மொத்த வாராக்கடன் நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 35.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட 40 வங்கிகளின் டிசம்பர் மாதம் வரையிலான வாராக்கடன் 2.43 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த தகவலை என்.பி.ஏ.சோர்ஸ் டாட் காம் தெரிவித்திருக்கிறது.

இதில் இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு 16,610 கோடி ரூபாயாக இருக்கிறது. மார்ச் 31, 2013-ம் ஆண்டு முடிவில் 51,189 கோடி ரூபாய் வாராக்கடன் இருந்தது. அதனுடன் 32.40 சதவீதம் மொத்த வாராக்கடன் அதிகரித்து 67,799.33 கோடி ரூபாயாக இருக்கிறது எஸ்.பி.ஐ.யின் மொத்த வாராக்கடன்.

கோல்கத்தாவை சேர்ந்த யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் 188.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முடிவில் 2,963.80 கோடி ரூபாயாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 5,582 கோடி ரூபாய் அதிகரித்து 8,546 கோடி ரூபாயாக இருக்கிறது இந்த வங்கியின் மொத்த வாராக்கடன்.

ஐடிபிஐ. வங்கியின் மொத்த வாராக்கடன் 55.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது 3,562 கோடி ரூபாய் வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. இப்போது 10,012 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வாராக்கடன் இருக்கிறது.

பேங்க் ஆஃப் பரோடாவின் மொத்த வாராக்கடன் 49.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 3,943 கோடி ரூபாய் அதிகரித்து இப்போது 11,926 கோடி ரூபாயாக இருக்கிறது. என்.பி.ஏ. சோர்ஸ் டாட் காம் இணையதள அறிக்கையின்படி 70 சதவீத வாராக்கடன் 10 வங்கிகளிடமே இருக்கிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை தவிர மற்ற அனைத்தும் பொதுத்துறை வங்கிகளே.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாராக்கடன் 8.2 சதவீதம் அல்லது 791 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் மாத முடிவில் 9,607.75 கோடி ரூபாயாக இருந்த மொத்த வாராக்கடன், நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 10,399 கோடி ரூபாயாக இருக்கிறது.

வங்கிகளின் வாராக்கடன் நான்காவது காலாண்டிலும் மோசமாக இருக்கும் என்று என்.பி.ஏ.சோர்ஸ் இணையதளத்தின் தலைவர் டி.கே. ஜெயின் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிகர வாராக்கடன் 49 சதவீதம் அதிகரித்து ரூ. 1.38 லட்சம் கோடியாக இருக்கிறது.

ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் வாராக்கடனை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து அறிவுறித்துக்கொண்டே இருக்கின்றன. மேலும், அதிகமான கடனை வைத்திருக்கும் நிறுவனங்களிடம் பேசி முடுவெடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x