Published : 19 Feb 2017 10:57 AM
Last Updated : 19 Feb 2017 10:57 AM
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டை எண்ணை தாக்கல் செய் வதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள எண் குறித்த தகவலை இம்மாதம் 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று முன்னர் தெரி விக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் இணைந்துள்ள 4 கோடி உறுப்பினர்களும் தங்கள் ஆதார் எண் குறித்த இபிஎப்ஓ-வின் 120 கள அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் உயிருடன் இருப்பது தொடர்பான ஆதாரத்தை ஆதாருடன் இணைந்த டிஜிட்டல் சான்று மூலம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கான கால அவகாசமும் மார்ச் 31,2017 வரை நீட்டிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜீவன் பிரமான் பத்திரம் என்ற சான்றளிப்பை ஓய்வூதியம் பெறுவோர் அளிக்க வேண்டும்.
இத்தகைய சான்றாதாரத்தை அளிப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை கடைசி தேதியாக இபிஎப்ஓ நிர்ணயித்திருந்தது. பின்னர் ஜனவரி 15, 2017 வரை நீட்டிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக இப்போது ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்த டிஜிட்டல் சான்று திட்டத்தை தாக்கல் செய்ய அனுமதித்து அதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளில் ஆண்டுக்கு ஒருமுறை உயிருடன் இருப்பதற்கான சான்றை அளிக்க வேண்டும். இத்தகைய சுய கையொப்பமிட்ட கடிதத்துக்குப் பதிலாக டிஜிட்டல் கடிதத்தை இனி அளித்தால் போதுமானது. இதை அவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் மூலமாகவே அளிக்க முடியும். இதற்கான வசதியை ஓய்வூதியம் பெறும் வங்கிகளே அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT