

திரவ எரிவாயு வாங்க ஜப்பான், தென் கொரிய நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு வைக்க உள்ளது. ஆசிய நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு ஏற்ப ஜப்பான், தென்கொரியா நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து திரவ எரிபொருள் வாங்க மீண்டும் பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்கியுள்ளது.
ஆசிய எரிபொருள் நுகர்வு சந்தையில் அடுத்த பத்து முதல் முப்பது ஆண்டுகளில் எரிவாயு முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தும் என்றும், இதற்கு முன்னர் 2013-ம் ஆண்டிலேயே இதற்கான முயற்சிகள் நடந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய மொத்த எரிபொருள் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கு 8 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தி பத்து சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி திரவ எரிவாயு 335 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.