Published : 08 Oct 2014 10:22 AM
Last Updated : 08 Oct 2014 10:22 AM
சர்வதேச சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஒரு சதவீதத்துக்கு மேலே சரிந்தன. சென்செக்ஸ் 296 புள்ளிகள் சரிந்து 26271 புள்ளியிலும், நிப்டி 93 புள்ளிகள் சரிந்து 7852 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 0.9 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.8 சதவீதமும் சரிந்தன.
இந்திய பங்குச்சந்தைகள் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தன. அந்நிய நிறுவன முதலீடு சரிந்ததும் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாகும். கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 2,583 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள். அக்டோபர் 1-ம் தேதி 63 கோடி ரூபாயை வெளியே எடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.
உலோகம், நுகர்பொருள், மருத்துவம் மற்றும் முதன்மை பொருள் ஆகிய துறை பங்குகள் அதிகமாக சரிந்தன. உலோகக் குறியீடு அதிகபட்சமாக 2.65 சதவீதம் சரிந்தது. அடுத்து மருத்துவ குறியீடு 1.85 சதவீதமும், முதன்மை பொருள் 1.78 %, ரியல் எஸ்டேட் குறியீடு 1.27 சதவீதமும் சரிந்தன. சென்செக்ஸ் பங்குகளில் ஹிண்டால்கோ 4.35%, சேசா கோவா 4.32 சதவீதம், சிப்லா 3.67%, டாக்டர் ரெட்டீஸ் 3.18% மற்றும் ஹெச்.டி.எப்.சி. 3.11 சதவீதமும் சரிந்தன. அதேபோல என்.டி.பி.சி பங்கு 1.19%, கெயில் 1.09%, டாடா மோட்டார்ஸ் 0.43%, விப்ரோ 0.37% மற்றும் டாடா பவர் 0.25 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.
கடன் சந்தையில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு
மியூச்சுவல் பண்ட்கள் கடந்த செப்டம்பர் மாதம் கடன் சந்தையில் 23,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன. நடப்பாண்டில் இதுவரையில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.4.89 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டில் மொத்தம் 5.12 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் சந்தையில் முதலீடு செய்தன. அதே சமயத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1.19 லட்சம் கோடியை செப்டம்பரில் முதலீடு (கடன் சந்தையில்) செய்திருக்கிறார்கள். பங்குச் சந்தையில் 4,200 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT