

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் எதிரொலியால், மும்பை பங்குச்சந்தையிலும், ரூபாய் மதிப்பிலும் ஏற்றம் நிலவியது.
மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து 20,957.81 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 6,241 ஆகக் காணப்பட்டது.
இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 பைசா உயர்ந்து 61.75 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஒரு மாத காலத்தில் புதிய உச்சமாகும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக நிலை காணப்படுகிறது என்ற கருத்துக் கணிப்பு முடிவுகளே பங்குச் சந்தை ஏற்றம் பெற வழிவகுத்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெறும் என்ற கருத்து கணிப்பகளின்படி முடிவுகள் வெளியானால், அது சந்தை ஏற்றம் பெற வழிவகுக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வலுவான மத்திய அரசு அமைய வேண்டும் என்றே சந்தை எதிர்பார்ப்பதாக பாங்க் ஆப் மெரில் லிஞ்ச் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.