Published : 28 Jan 2014 09:56 AM
Last Updated : 28 Jan 2014 09:56 AM

டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் மரணம்: புதிய நிர்வாக இயக்குநர் விரைவில் நியமனம்

டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்லிம் பாங்காங்கில் இருக்கும் ஒரு ஹோட்டலின் 22 மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். டாடா மோட்டார்ஸ் தாய்லாந்து நிறுவனத்த்தின் இயக்குநர் குழு கூட்டத்துக்கு செல்வதற்காக தாய்லாந்து நாட்டிற்கு தன் மனைவியுடன் சென்றார் கார்ல் ஸ்லிம்.

51 வயதாக கார்ல் ஸ்லிம் 2012-ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேரும் முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்தார் கார்ல்.

கார்ல் ஸ்லிமின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று பாங்காங் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று காவல் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் அவரது அறையில் இருந்து 3 பக்க கடிதம் கிடைத்ததாகவும் அந்த எழுத்துகள் ஆங்கிலத்தில் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தற்கொலையாக கூட இருக்க கூடும் என்ற கோணத்திலும் விசாரிப்பதாக தெரிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநரை விரைவில் நியமிக்க இருப்பதாக நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித் திருக்கிறார். இது குறித்து இன்னும் சில நாட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் சவாலான காலகட்டத்தில் சரியான தலைவராக இருந்தார் என்று டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி தெரிவித்தார். கார்ல் ஸ்லிமின் மரணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் பாதிப்பு அல்ல. ஒட்டுமொத்த ஆட்டோ மொபைல் துறைக்கும் பாதிப்பு என்று அசோசாமின் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராவத் தெரிவித்திருக்கிறார். அசோசாமின் ஆட்டோமொபைல் பிரிவின் முதல் தலைவர் கார்ல் ஸ்லிம் என்பது குறிப்பித்தக்கது.

இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் பங்கு 5.98 சதவீதம் சரிந்து, 348.25 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x