பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை: தி இந்து மைய நிகழ்ச்சியில் நிபுணர்கள் கருத்து

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை: தி இந்து மைய நிகழ்ச்சியில் நிபுணர்கள் கருத்து
Updated on
1 min read

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளில் பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தி இந்து மைய நிகழ்ச்சியில் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான தி இந்து மையம் மற்றும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிஸம் சார்பில் கறுப்பு பணம் மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான விவாதம் மியூசிக் அகடமியில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடந்தது. கறுப்பு பணம் மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற நூலின் ஆசிரியரும், தி இந்து மையத்தின் ஆலோசகருமான சி.ராம் மனோகர் ரெட்டி நிகழ்ச்சியில் பேசியதாவது:

மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து 5 மாதங்கள் கடந்த பிறகும், எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரம் புலப்படவில்லை. மூன்று முதல் நான்கு லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் வெளியில் இருப்பதாக சொன்னார்கள். அவை அனைத்தும் தற்போது வங்கிகளுக்குள் வந்துவிட்டது. தேர்தல் நடைமுறையை சுத்தம் செய்வதற்காக என்று சொன்னார் கள். ஆனால், உத்தரப்பிரதேச தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்வரை என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த வித்தியாசமும் இல்லை.

தேர்தல் நன்கொடை பத்திரம் என்றார்கள். அதில் வெளிப்படைத் தன்மை இல்லை. அரசியலில் மோடி அரசு கடந்த நவம்பருக்கு முன் இருந்ததை விட வலுவாக அமர்ந்திருக்கிறது. அது எப்படி என்பது புரியவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார முடிவு என்பதைவிட அரசியல் முடிவு என்பதில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஐந்து மாதங்களில் எந்தப் பலனும் இல்லை என்று தெரிந்தும் மக்கள் ஏன் போராடவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு ராம் மனோகர் ரெட்டி பேசினார்.

முன்னதாக பொருளாதார நிபுணர் எஸ்.சுப்ரமணியன் பேசும் போது, ‘பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் மூலம், கறுப்பு பணம் நமது வங்கி அமைப்புகளுக்குள்ளும், பங்குச் சந்தைகளுக்குள்ளும் நுழைக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு குறித்து ஆராய வேண்டும்’ என்றார்.

தி இந்து பிஸினஸ்லைன் ஆசிரியர் ராகவன் சீனிவாசன் பேசும்போது, ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. மத்திய அரசின் நடவடிக்கை தனிமனித சுதந்திரத்தில் தலையிட்ட செயலாகவே நான் கருதுகிறேன். ஆனால், இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு, எந்தப் பலனும் இல்லை என்று தெரிந்தும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த புதிரை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்றார். நிகழ்ச்சியில் தி இந்து என். ராம், என்.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in